பிரபாஸின் சலார்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
பாலிவுட்டில் தான் ஒரு வருடத்துக்கு முன்பே வெளியீட்டுத் தேதியை அறிவிப்பார்கள்.
பிரபாஸின் சலார் படம் ஏப்ரல் 14, 2022 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேஜிஎஃப் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் இணைந்துள்ளார் பிரபல நடிகர் பிரபாஸ். பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் 2018-ல் வெளியான கேஜிஎஃப் என்கிற கன்னடப் படம் இந்திய அளவில் கவனம் பெற்றது. மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. கேஜிஎஃப் படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.
பிரபாஸ் - பிரஷாந்த் நீல் இணையும் படத்துக்கு சலார் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஹாம்பேல் தயாரிக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. சலார் படத்தின் பூஜை ஹைதராபாத்தில் ஜனவரி 15-ம் தேதி நடைபெற்றது. கதாநாயகியாக ஷ்ருதி ஹாசன் நடிக்கிறார். பாகுபலி 2, சாஹோ படங்களுக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சலார் படம் ஏப்ரல் 14, 2022 அன்று வெளியாகும் என்று இப்போதே அறிவித்துள்ளார்கள். வழக்கமாக பாலிவுட்டில் தான் ஒரு வருடத்துக்கு முன்பே வெளியீட்டுத் தேதியை அறிவிப்பார்கள். இப்போது இந்த நடைமுறையை தெலுங்குத் திரையுலகமும் பின்பற்ற ஆரம்பித்துள்ளது.