சென்னையில், பிரபல இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கு இந்திய சினிமாவின் பழம்பெரும் இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது.
சென்னை நந்தனத்தில் உள்ள காஸ்மோபாலிடன் கிளப் கோல்ஃப் அனெக்ஸ் அரங்கத்தில் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் சென்டனரி காம்மமொரேசன் ( Rotary Club of Madras Centenary Commemoration) விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கு ஆர்சிஎம்சிசி தலைவர் டாக்டர் எஸ்.சுசித்ரா, லெஜண்டரி டிவைன் ஹூமானிடேரியன் டைரக்டர் ஆஃப் இந்தியன் சினிமா(legendary divine humanitarian director Indian cinema) விருதினை வழங்கினார்.
விழாவில் பேசிய இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், பத்திரிகைகளில் கொலை, கொள்ளை, பாலியல் விவகாரங்கள் பரபரப்புக்காக வெளியிடப்படுகிறது. அதனை படிக்கும் இளைஞர்களுக்கு, அடுத்த தலைமுறையில் பாதிப்பை ஏற்படுத்தும். வியாபார ரீதியில் ஒரு சில பரபரப்பு தேவைதான். நானும் நேத்து ராத்திரி யம்மா பாடலை இயக்கியவன் தான்... இருந்தாலும் நல்ல தகவல்களை முன்னிலைப்படுத்த முன்வரவேண்டும். சிறந்த சமூக சேவைகளை வெளிப்படுத்துவதிலும் பத்திரிகைகள், ஊடகங்கள் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் தொழிற் சேவை மாவட்ட தலைவர் எஸ்.என் பாலசுப்பிரமணியன், ஏ.ஜி. சேசைய்யா, சமூக சேவைகள் பிரிவு மாவட்ட தலைவர் முத்துசுவாமி, மற்றும் நிர்வாகிகள் ஆனந்த், சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.