முகப்பு
செய்திகள்

ரசிகர்களிடம் மன்னிப்புக்கேட்ட 'கோப்ரா' பட இயக்குநர்

கோப்ரா பட விமர்சனம் தொடர்பாக ரசிகர்களிடம் இயக்குநர் அஜய் ஞானமுத்து மன்னிப்புக்கேட்டார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான் போன்றோர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியான படம் கோப்ரா. 3 மணி நேரம், 3 நமிடங்கள், 3 வினாடிகள் ஓடக்கூடிய இந்தப் படம் எதிர்மறை விமரசனங்களைப் பெற்றது. 

இதனையடுத்து இந்தப் படத்திலிருந்து 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு இயக்குநர் அஜய் ஞானமுத்து பதிலளித்தார். 

அப்பொழுது ரசிகர் ஒருவர், புத்திசாலித்தனமான திரைக்கதையுடன் கூடிய நல்ல படம் கோப்ரா. ஆனால் முடிவு ஏமாற்றமளித்தது என்று தனது கருத்தினை பதிவு செய்தார். 

அவருக்கு பதிலளித்த அஜய் ஞானமுத்து, ''ஹீரோ இலகுவாக தப்பித்து வெளிநாடுகளில் நடந்துபோவது போல என்னால் திரைக்கதை அமைக்க முடியும். ஆனால் ஹீரோ கதாப்பாத்திரம் குற்றங்கள் செய்திருக்கும்போது அவரை சுதந்திரமாக நடமாடவிடுவது தவறு. இல்லையா?'' என கேள்வி எழுப்பியுள்ளார். 

திரைக்கதை குழப்பமாக இருக்கிறது என்ற ரசிகரின் கருத்துக்கு, ''உங்களுக்கு திரைக்கதை குழப்பமாக இருந்ததற்கு என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். மூளையை கசக்கி பிழியும் வகையிலான படங்கள் எனக்கு பிடிக்கும். இந்த முறை நான் அதனை முயற்சித்தேன். முடிந்தால் இன்னொரு முறை கோப்ரா படம் பாருங்கள். உங்களுக்கு பிடிக்கும் என நம்பிக்கை இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

 இமைக்கா நொடிகள் படத்தின் இயக்குநர்தான் கோப்ரா படத்தை இயக்கினாரா? என்பதை நம்பமுடியவில்லை என்ற ரசிகரின் கருத்துக்கு, ''நீங்கள் ஏமாற்றமடைந்ததற்கு மன்னித்துக்கொள்ளுங்கள் அடுத்த முறை உங்களை திருப்திப்படுத்துவேன். நீங்கள் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன் மீண்டும் முயற்சித்துப் பாருங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.