சென்னையின் பிரபல திரையரங்குக்கு சீல் - காரணம் இதுதான்
சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பாக பிரபல திரையரங்குக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கம் மிகவும் பிரபலமான திரையரங்கமாகும். இந்த நிலையில் இந்த திரையரங்கம் பல ஆண்டுகளாக சொத்து வரி மற்றும் கேளிக்கை வரியை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இதன்படி ஆல்பர்ட் திரையரங்கம் 51 லட்சத்து, 22 ஆயிரத்து 252 ரூபாய் சொத்து வரியாகவும் 14 லட்சம் ரூபாய் கேளிக்கை வரியாகவும் செலுத்த வேண்டும். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் ஆல்பர்ட் திரையரங்கம் வரி செலுத்தவில்லை. இதன் காரணமாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் திரையரங்குக்கு இன்று (மார்ச் 31) சீல் வைத்துள்ளனர்.
முன்னதாக 2021 - 22 ஆம் நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்துவதற்கு இன்றே (மார்ச் 31) கடைசி நாள் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கைவிடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.