இளைய தலைமுறையிடம் கிடைத்த அதீத வரவேற்பால், தமிழில் ஒளிபரப்பான சின்னத்திரை தொடர் ஒன்று மலையாளத்தில் மறுஉருவாக்கம் செய்யப்படவுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஈரமான ரோஜாவே தொடர் ஒளிபரப்பாகிவந்தது. இந்தத் தொடர் கடந்த வாரம் இறுதிக்கட்டத்தை எட்டியது.
ஈரமான ரோஜாவே தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஈரமான ரோஜாவே -2ஆம் பாகம் ஒளிபரப்பானது. இரண்டாம் பாகத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
இரண்டாவது சீசனில் திரவியம் ராஜகுமரனுக்கு ஜோடியாக நடிகை ஸ்வாதி நடித்தார். சித்தார்த்துக்கு ஜோடியாக கெபிரியல்லா நடித்தார்.
இந்த ஜோடிகளுக்கு இடையிலான காதல் காட்சிகள் மூலம் இளைய தலைமுறையினர் பலர் ரசிகர்களாகினர். இந்தத் தொடரில் நடிகை ஸ்வாதிக்கு ஆரம்பம் முதலே நல்ல வரவேற்பு இருந்தது. இவர் 96 திரைப்பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில், நடிகர் கார்த்தியுடன் புதிய படத்தில் ஸ்வாதி நடித்து வருகிறார்.
ஈரமான ரோஜாவே தொடருக்கு கிடைத்த அதீத வரவேற்பைத் தொடர்ந்து, இந்தத் தொடர் மலையாளத்தில் எடுக்கப்படவுள்ளது. ஏசியா நெட் தொலைக்காட்சியில் அனுராகா கரிக்கின் வெல்லம் என்ற பெயரில் மறுஉருவாக்கம் செய்யப்படுகிறது. இதனால், ஈரமான ரோஜாவே தொடர் குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரமான ரோஜாவே தொடர் முடிவடைந்த நிலையில், தற்போது அதே கதை மலையாளத்தில் ஒளிபரப்பாகவுள்ளதால், ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.