லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய் 67 படத்தில் நடிகை பிரியா ஆனந்த் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் வெளியான நிலையில், விஜய்யின் 67வது படத்தில் லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக விஜய் இணைந்துள்ளார்.
விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, விஜய் 67 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பணிகளை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கியுள்ளார்.
தளபதி 67 எனப் பெயரிடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 2ஆம் தேதி தொடங்கியதாக அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது.
ஒரு மாதமாக கொடைக்கானல் மற்றும் சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் இன்று காஷ்மீருக்கு தனிவிமானம் மூலம் சென்றனர்.
இந்நிலையில், அடுத்த 6 மணிநேரம் பட்டாசாகம் இருக்கும் என்று படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஸ் டிவிட்டரில் பதிவிட்டுள்ள நிலையில், தளபதி 67 படத்தில் பிரபல நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அடுத்த அப்டேட்டாக நடிகை பிரியா ஆனந்த் இப்படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தெரிவித்துள்ளது.
தொடர்ந்து ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வரும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.