ரோஜா தொரின் மூலம் புகழ் பெற்ற நடிகை பிரியங்கா நல்காரி மீண்டும் சின்னத்திரை தொடரில் நடிக்கவுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடர் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. இவர் தெலுங்கு, தமிழில் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும், ரோஜா தொடரில் நடித்ததால், இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.
ரோஜா தொடர் ஒளிபரப்பான காலகட்டத்தில் தொடர்ந்து டிஆர்பி பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வந்தது. அதில் நாயகனாக நடித்த சிபு சூர்யன் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்தார்.
பிரியங்கா நல்காரி சன் தொலைகாட்சியிலிருந்து ஜீ தமிழில் சீதா ராமன் தொடரில் நாயகியாக நடித்து வந்தார். சீதா ராமன் தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவந்த சமயத்தில், திடீரென தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
காதலரை திருமணம் செய்துகொண்டதால், அவருடன் நேரத்தை செலவிட விரும்புவதாகவும், வெளிநாட்டில் அவருடன் தங்கியிருப்பதால், சூட்டிங்கிற்கு வந்து செல்ல முடியவில்லை எனவும் குறிப்பிட்டு சீதா ராமன் தொடரிலிருந்து விலகினார்.
திருமணத்திற்கு பிறகு பிரியங்கா தொடரில் நடிக்க மாட்டாரா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்நிலையில், மீண்டும் சின்னத்திரை தொடரில் பிரியங்கா தனது ரீ-என்ட்ரியை கொடுக்கவுள்ளார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள நளதயமந்தி என்ற தொடரில் முதன்மை பாத்திரத்தில் பிரியங்கா நல்காரி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தத் தொடரில் நடிப்பதற்கான முன்னோட்டம் நடைபெற்ற நிலையில், அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.
இடைவேளைக்குப் பிறகு பிரியங்கா மீண்டும் நடிக்கவுள்ளதால், அவரின் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.