அரசியலுக்கு வந்தால் சினிமாவில் நடிக்க மாட்டேன்: விஜய்
நான் அரசியலுக்கு வந்தால் சினிமாவில் நடிக்க மாட்டேன் என விஜய் கூறியதாக மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நடிகா் விஜய்யின் மக்கள் இயக்கம் சாா்பில் கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக சிறப்பிடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை, சான்றிதழ் வழங்கும் விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.
இதில் சுமார் 1,600 மாணவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் நடிகர் விஜய் மேடையில் நின்றவாறு பொன்னாடை போர்த்தி சான்றிதழ் - ஊக்கத்தொகை வழங்கினார்.
இந்த நிகழ்வு மூலம் தொகுதிவாரியாக அரசியலில் தன்னை முன்னெடுத்து செல்வதற்காக விஜய் நடத்தினார் எனப் பல்வேறு தரப்பினர் கருத்துகளைப் பதிவு செய்திருந்தனர்.
இதற்கிடையே, வெங்கட் பிரபுவுடன் இணைந்து நடிக்கவுள்ள அடுத்த படத்துக்கு பிறகு 3 ஆண்டுகள் நடிப்பில் இருந்து விஜய் ஓய்வெடுக்கவுள்ளதாகவும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கவனம் செலுத்தவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகின.
இதையும் படிக்க | சென்னை ரசிகர்களுக்காகவே படம் தயாரிக்கிறேன்: தோனி
இந்நிலையில், பனையூர் இல்லத்தில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை ஈடுபட்டார்.
இந்தக் கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த நிர்வாகிகள், “ அரசியலுக்கு வந்தால் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விடுவதாகவும் தன் கவனம் முழுக்க அரசியலில் மட்டுமே இருக்கும் என விஜய் கூறினார். அவர் அரசியலுக்கு வருவதற்கான அனைத்துக் கட்டமைப்புகளையும் நாங்கள் செய்துவிட்டோம். அவர் கைகாட்டினால் அரசியலில் ஈடுபடுவதோடு அவரோடு தொடர்ந்து பயணிப்போம்” எனத் தெரிவித்துள்ளனர்.