பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!
நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருந்த ஷில்பா ஷெட்டி தமிழில் பிரபு தேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்தார். மேலும் குஷி படத்தில் நடிகர் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியும் இருந்தார்.
ஷில்பா ஷெட்டி ராஜ் குந்த்ரா என்பவரைக் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆபாச பட வழக்கில் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பிஎம்எல்ஏ 2002 சட்டத்தின்படி சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97.79 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
Advertisement
இதில் ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் மும்பை- ஜுஹு பகுதியில் உள்ள வீடு, புணேவில் இருக்கும் வீடுகளும் அடங்கும்.
2017இல் மாதம் மாதம் 10 சதவிகிதம் லாபம் பெறலாம் எனப் பொய்யான வாக்குறுதிகளைக்கூறி பொதுமக்களிடம் இருந்து பிட்காயினியில் ரூ.6,600 கோடியை மோசடி செய்துள்ளனர். உக்ரைனில் பிட்காயின் மைனிங் அமைப்பதற்காக அமித் பரத்வாஜ் என்பவரிடம் இருந்து ராஜ் குந்த்ரா 285 பிட்காயின் வாங்கியுள்ளார். இந்தத் திட்டம் இன்னும் அமலுக்கு வராமல் இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.150 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 385 பிட்காயினை ராஜ் குந்த்ரா தற்போதுவரை அனுபவித்து வந்துள்ளார்.
முக்கிய குற்றவாளிகளான அஜய் பரத்வாஜ், மகேந்திர பரத்வாஜ் தலைமறைவாகவே இருக்கிறார்கள் எனவும் இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.