மகாத்மா காந்தியின் 76-வது நினைவு நாளையொட்டி ராஜ்கட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் இந்நாளில் மகாத்மா காந்தியின் அர்பணிப்பு மற்றும் குணங்களை நினைவு கூறி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், “தான் வாழும் சமூகத்திற்குப் பாடுபட்டவர் உண்டு. தேச அளவில் தொண்டு செய்ய எழுந்தோர் உண்டு. ஆனால், ஒரு பெரும் காலத்தின் மனசாட்சியாகவே உயர்ந்து திகழ்ந்த மகா மனிதர்கள் அபூர்வம். அவர்களில் முதன்மையானவர் காந்திப் பெருமகனார். அன்னாரின் நினைவு நாளில், அவர்தம் சொற்கள் நம்மை வழிநடத்துவதாக.” எனப் பதிவிட்டுள்ளார்.
மகாத்மா காந்தி 1948-ல் நாதுராம் விநாயக் கோட்சே எனும் இந்து தேசியவாதியால் கொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு கமல்ஹாசன் ‘ஹேராம்’ படத்தை இயக்கியிருந்தார். காந்தியைச் சுட்டுக்கொல்ல கிளம்பும் ஒரு மனிதனின் மனமாற்றத்திற்குக் காந்தியே காரணமாக அமைவதே இப்படத்தின் மையம் என்பது குறிப்பிடத்தக்கது.