ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்து கொள்ளாதது ஏன்? டாப்ஸி விளக்கம்!
பிரபல பாலிவுட் நடிகை டாப்ஸி பண்ணு ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு செல்லாததுக்கு காரணம் கூறியுள்ளார்.
ஆசியாவின் பெரும் பணக்காரரான ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவா் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மொ்ச்சண்ட் தம்பதிக்கு மும்பையில் பெரும் பொருள் செலவில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. அதில் உலகளவிலான பிரபல திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரா்கள், தொழிலதிபா்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
உலகின் மிக முக்கியமான நபர்கள் கலந்துகொண்ட இந்த திருமண நிகழ்வுகளுக்காக முகேஷ் அம்பானி ரூ.2000 கோடி வரை செலவு செய்திருப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மணமகன் தோழர்கள் மற்றும் நடிகர்கள் ஷாருக்கான், ரன்வீர் சிங் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுக்கு ஆனந்த் அம்பானி விலையுயர்ந்த கைக் கடிகாரங்களை பரிசாக வழங்கியதும் பேசுபொருளானது.
இந்த நிகழ்ச்சிக்காக சினிமா நடிகைகள் அணிந்த உடைகள் சமூக வலைதளத்தில் வைரலாகின. இந்த நிகழ்ச்சியில் நடிகை டாப்ஸி பங்கேற்கவில்லை.
அதற்கான காரணத்தை நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார் டாப்ஸி. அதில், “எனக்கு அவர்களை தனிப்பட்ட முறையில் தெரியாது. திருமணம் என்பது தனிப்பட்ட விசயம் என நினைக்கிறேன். அவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு அந்தக் குடும்பத்துடன் சிறிதும் பழக்கமில்லை. எனக்கு அல்லது எனது குடும்பத்துக்கும் சிறியதாவது பழக்கமிருந்தால் மட்டுமே நான் பெரும்பாலும் திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்வேன். அதனால்தான் ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு செல்லவில்லை” எனக் கூறியுள்ளார்.
டாப்ஸியின் இந்தக் கருத்து சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.
தற்போது டாப்ஸி 3 படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக வெளியான டன்கி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.