சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா?
நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘டான்’ படத்தை இயக்கியவர் சிபி சக்கரவர்த்தி. அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றாலும் சிபிக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.
காரணம், லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினியை வைத்து சிபி இயக்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கதை சரியாக இல்லாததால் ரஜினி விலகிக்கொண்டார்.
பின், சிபி சக்கரவர்த்தி தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்களில் கதை சொன்னதாகவும் நானியை வைத்து படம் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அப்படம் கைகூடவில்லை.
இந்த நிலையில், அவர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எஸ்கே - 24 படமாக உருவாகும் இதில் நாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது, இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. டான் திரைப்படத்தில் நாயகனை தொந்தரவு செய்யும் கதாபாத்திரமாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.