ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!
நடிகை ஸ்ரேயா ரெட்டி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
வெயில், அங்காடித்தெரு, அநீதி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் வசந்தபாலன். இவருக்கு வெயில் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.
சமீபத்தில் இவரது இயக்கத்தில், நடித்த அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான அநீதி திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
வசந்த பாலன் தலைமைச் செயலகம் என்ற இணையத் தொடரொன்றை இயக்கியுள்ளார். இத்தொடரில் நடிகர் கிஷோர் பிரதான வேடத்தில் நடித்துள்ளார். மேலும் பரத் நிவாஸ், ரம்யா நம்பீசன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
ராடன் நிறுவனம் சார்பில் ராதிகா சரத்குமார் தயாரிக்கும் இந்த இணையத் தொடருக்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார். இத்தொடர் இன்று (மே 17) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.
இதில் நடித்த நடிகை ஸ்ரேயா ரெட்டி நேர்காணல் ஒன்றில், “25 வருடமாக நான் ஜெயலலிதா அம்மாவின் பக்கத்து வீட்டில் வசித்திருக்கிறேன். நான் சிறிய வயதிலிருந்தே அவர்கள் வெளியே செல்லும்போது கை அசைப்பேன். காரில் இருந்தபடி அவர்களும் கை அசைப்பார்கள். சில நேரங்களில் பிஸியாக இருந்தால் பார்க்கமாட்டார்கள். அப்போதிலிருந்தே எனக்கு ஜெயலலிதா அம்மா மாதிரி இருக்கனும் என்ற ஆசை இருந்தது. அவர்தான் எனக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறார்” என்றார்.
நடிகை ஸ்ரேயா ரெட்டி சமீபத்தில் சலார் திரைப்படத்தில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்தார். தற்போது தெலுங்கில் பவன் கல்யாணின் படத்தில் நடித்து வருகிறார்.