விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடரில் நாயகியாக நடித்த நடிகை பிரதீபா தனது தந்தையால் பெருமைகொள்ளும் நெகிழ்ச்சியான நிகழ்வை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மகாநதி தொடரில் நடிகை பிரதீபா முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் அந்தத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக நடிகை திவ்யா முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மலையாள திரைப்படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், மகாநதி தொடரிலிருந்து அவர் விலகியதாக கூறப்பட்டது. மலையாள திரைப்படத்தில் நடிக்கும் படங்களையும் நடிகை பிரதீபா ரசிகர்களுடன் பகிர்ந்திருந்தார்.
அடிப்படையில் அரசு முதன்மைத் தேர்வுகளுக்குத் தயாராகும் நோக்கத்தில் படித்துவந்த பிரதீபா, நடிகையாக பலரைக் கவர்ந்ததால் அடுத்தடுத்த வாய்ப்புகள் அவருக்கு குவிந்து வருகின்றன.
தேர்வுகளுக்கு படித்துவந்தாலும், பாடல், நடனத்தின்மீது ஆர்வம் கொண்ட பார்த்திபா, பாடல் பாடியும் நடனமாடியும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வபோது விடியோக்களைப் பதிவிடுவது வழக்கம்.
சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய அவர், தற்போது தனது தந்தையின் உழைப்புக்கு கிடைத்த பலனை தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது, ''பெருமைமிகுந்த தருணம். என் அப்பா, 40 ஆண்டுகளாக தமிழக பொதுப்பணித் துறையில் செயல் பொறியாளராக தனது சேவையைத் தொடர்ந்தவர். தற்போது உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணிக்கு தனிப்பட்ட உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் விடாமுயற்சியும் கடின உழைப்பும் என்னை ஒவ்வொருநாளும் என்னைக் கவரத் தவறுவதில்லை. வாழ்த்துகள் அப்பா. உங்கள் பணியின் இரண்டாவது இன்னிங்ஸ் வெற்றிகரமாகத் தொடங்கட்டும்'' எனப் பதிவிட்டுள்ளார்.
நடிகை பிரதீபாவும் அரசுப் பணித் தேர்வுகளுக்கு தயாராகிக்கொண்டிருந்தார். நடிப்பதில் தற்போது வாய்ப்புகள் அதிகரிக்கவே, முழுமையாக நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.