முகப்பு
செய்திகள்

பாடகி சுசித்ரா மீது அவதூறு வழக்குத் தொடர்ந்த நடிகை ரீமா கல்லிங்கல்!

மலையாள நடிகையும் தயாரிப்பாளருமான ரீமா கல்லிங்கல் தன்னைப் பற்றி தவறாகப் பேசிய பாடகி சுசித்ரா மீது அவதூறு வழக்குத் தொடர்வதாகத் தெரிவித்துள்ளார்.

Updated On : 3 செப்டம்பர், 2024 at 11:54 AM
பாடகி சுசித்ரா / நடிகை ரீமா கல்லிங்கல்
பகிர்:

மலையாள நடிகையும் தயாரிப்பாளருமான ரீமா கல்லிங்கல் தன்னைப் பற்றி தவறாகப் பேசிய பாடகி சுசித்ரா மீது அவதூறு வழக்குத் தொடர்வதாகத் தெரிவித்துள்ளார்.

பாடகி சுசித்ரா தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பேசியபோது நடிகை ரீமா கல்லிங்கல், அவரது கணவரும் இயக்குநருமான ஆஷிக் அபு ஆகியோர் கேரளத்தில் ரேவ் பார்ட்டிகள் நடத்துவதாகவும், அங்கு போதைப் பொருள்கள் கிடைப்பதாகவும் கூறியிருந்தார். மேலும், பல இளம் நடிகைகளை இந்த பார்ட்டிகளில் போதை பொருள் பயன்படுத்த வைப்பதாக செய்திகளில் படித்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

சுசித்ரா குறிப்பிட்டது போல எந்த குற்றச்சாட்டுகளும் அதிகாரப்பூர்வமாக தற்போது வரை வெளிவரவில்லை.

இதனைத் தொடர்ந்து, சுசித்ரா பேசியது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த ரீமா கல்லிங்கல், “இதுபோன்ற தவறான செய்திகள் முக்கியச் செய்திகளில் வராமல் போனாலும், எந்த அடிப்படை புரிதலுமற்ற கட்டுரைச் செய்தியை வைத்து சுசித்ரா தவறாகக் கூறுவதால் நான் இதை விளக்குகிறேன். அவர் கூறியது போன்ற எந்த நிகழ்ச்சியும் இதுவரை நடக்கவில்லை. நான் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவுள்ளேன்” என்று பதிவிட்டிருந்தார்.

இயக்குநர் ஆஷிக் அபு

மேலும், “அந்த 30 நிமிடக் காணொளியில் 2017 பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களின் பெயரைக் குறிப்பிட்டு அவமானப்படுத்தியது மட்டுமின்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு அது தொடர்பாக முன்னரே தெரியுமென்று சுசித்ரா கூறியுள்ளார். ஃபகத் உள்ளிட்ட நடிகர்களின் வாழ்க்கையை ஹேமா கமிட்டி மூலமாக நாசப்படுத்த முதல்வர் பினராயி விஜயன், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்டோர் முயன்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஹேமா கமிட்டி எதற்காக தொடங்கப்பட்டது என நாம் அனைவருக்கும் தெரியும். சுசித்ரா மீது சிறப்பு விசாரணைக் குழுவில் புகாரளித்து அவதூறு வழக்குத் தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் ஆஷிக் அபு மற்றும் ரீமா கல்லிங்கலுக்கு ஆதரவாக அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பு (ஏஐஒய்எஃப்) ஆதரவு தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இது ஆஷிக் அபு மீதான திட்டமிட்டத் தாக்குதல் எனக் குறிப்பிட்ட ஏஐஒய்எஃப் அமைப்பினர், ஹேமா கமிட்டி விவகாரத்தில் அவரின் குரலை முடக்குவதற்கான நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.