இந்தியாவில் சாதிகள் இல்லையா? புலே படத்தின் தடைக்கு கொந்தளித்த அனுராக் காஷ்யப்!
சமூக சீர்திருத்தவாதி சாவித்ரிபாய் புலே திரைப்படத்தின் தடை குறித்து...
சமூக சீர்திருத்தவாதி ஜோதிராவ், சாவித்ரிபாய் புலேவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள புலே திரைப்படத்தை இந்தியாவில் வெளியாக தடை விதிக்கப்பட்டதுக்கு இயக்குநர் அனுராக் காஷ்யப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள புலே படத்தினை அனந்த் நாராயண் மகாதேவன் எழுதி இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் மத்திய தணிக்கைக் குழு வாரியம் சில காட்சிகளை மாற்றும்படி வலியுறுத்தியதால் அதையும் அனுராக் காஷ்யப் கண்டித்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்தப் படத்தின் டிரைலர் கடந்த ஏப்.10ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்துக்கு சிலர் தங்களை தவறுதலாக காண்பிப்பதாக விமர்சனம் வைத்திருந்தனர்.
இந்தியாவில் இந்தப் படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டதால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சாதிகள் சம்பந்தப்பட்ட வார்த்தைகளையும் நீக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
இந்தப் படம் ஏப்.25ஆம் தேதி திரைக்க வருமென அறிவிக்கப்பட்டிருந்தது.
சாதி இல்லையெனில் ஏன் எதிர்க்கப் போகிறார்கள்?
இந்நிலையில் இது குறித்து இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியதாவது:
நான் நடித்த முதல் நாடகம் ஜோதிபாய், சாவித்ரிபாய் புலே பற்றியதுதான்.
இந்தியாவில் சாதிகள் இல்லையெனில் ஏன் அதை எதிர்த்து போராடப் போகிறார்கள்?
இந்தப் படம் மட்டுமல்ல ஏற்கனவே சந்தோஷ், தடாக் 2, பஞ்சாப் 95, டீஸ் ஆகிய படங்களுக்கும் இந்தப் பிரச்னைகளால் இந்தியாவில் வெளியாகாமல் இருக்கின்றன.
கோழைத்தனமானவர்கள்
மத்திய தணிக்கைக் குழுவை தாண்டி மற்றவர்கள் எப்படி படத்தினை பார்க்கிறார்கள்? இந்த ஒட்டுமொத்த அமைப்புமே மோசமாக இருக்கிறது.
சாதிய, மதவாத அரசினால் இதுபோல் இன்னும் எத்தனை படங்கள் முடக்கப்பட்டுள்ளனவோ?
இந்தப் படங்கள் அவர்களை அப்படி என்னச் செய்கிறது என திறந்த மனதுடனும் வெளியே பேசமாட்டார்கள். மிகவும் கோழைத்தனமானவர்கள்.
சாதியை ஒழித்து விட்டீர்களா?
தடாக் 2 படத்தின் திரையிடலின்போது தணிக்கை வாரியம் எங்களிடம் மோடி சாதிகளை ஒழித்துவிட்டார் எனக் கூறினார்கள். அதே நேரத்தில் சந்தோஷ் திரைப்படம் இந்தியாவில் வெளியாகவில்லை.
தற்போது, பிராமணர்கள் புலே படத்தை எதிர்க்கிறார்கள். சாதிகளே இல்லையென்றால் நீங்கள் எப்படி பிராமணர்கள் ஆவிர்கள்? நீங்கள் யார்? ஏன் படத்தை எதிர்க்கிறீர்கள்?
சாதிகளே இல்லையெனில் ஏன் சாவித்ரிபாய், ஜோதிராவ் புலே போராடினார்கள்?
இந்தியாவில் சாதிகளே இல்லை என்று அனைவரையும் முட்டாள்களாக்க பார்க்கிறீர்களா? எனக் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.