இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) விவகாரங்களில் தலையிடுவதற்கு முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் விவகாரங்களில் தலையிடுவதற்கு முன்னாள் தலைவரும், பாஜக மக்களவை உறுப்பினருமான அனுராக் தாக்கூருக்கு, கடந்த 2017 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
பிசிசிஐயில் சீர்திருத்தங்களையும், புதிய மேம்பாடுகளையும் கொண்டுவருவதற்காக உச்ச நீதிமன்றம் கடந்த 2015 ஆம் ஆண்டு லோதா குழுவை நியமித்தது. இந்தக் குழுவின் பரிந்துரைகளை அப்போதைய பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் அமல்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அனுராக் தாக்கூர் மற்றும் அப்போதைய பிசிசிஐ செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை பதவியிலிருந்து நீக்கியதுடன், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், இந்த வழக்கில் அனுராக் தாக்கூர் நேரில் ஆஜராகி தனது தவறுகளை ஒப்புக்கொண்டு முழுமையான மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து அந்த வழக்கில் இருந்து நீதிமன்றம் அவரை விடுவித்தது.
இதனைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் விவகாரங்களில் தலையிடுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுராக் தாக்கூருக்கு 2017 ஆம் ஆண்டு விதித்த தடையில் மாற்றங்களைக் கொண்டுவரக் கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி தலைமையிலான அமர்வு இந்த விவகாரத்தில் அனுராக் தாக்கூரின் மீது வாழ்நாள் தடை விதிக்கத் தேவையில்லை எனக் கூறி வியாழக்கிழமை (பிப். 5) தீர்ப்பளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.