எனக்கு ஒன்றும் இல்லை... நன்றாக இருக்கிறேன்: விஷால்
நடிகர் விஷால் உடல்நிலை குறித்து...
நடிகர் விஷால் தன் உடல்நிலை குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மத கஜ ராஜா’ திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு உருவாகி வெளியீட்டிற்குத் தயாரானது.
ஆனால், அப்படத்தைத் தயாரித்த ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம் தங்களின் பழைய கடனை அடைப்பதற்காக அப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்தனர்.
Advertisement
தற்போது, இப்படம் உருவாகி 12 ஆண்டுகள் கழித்து பொங்கல் வெளியீடாக இன்று வெளியாகியுள்ளது.
சில நாள்களுக்கு முன், படத்தின் புரமோஷன் நிகழ்வில் சுந்தர். சி, விஜய் ஆண்டனி, விஷால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் விஷால் பேசும்போது, அவரால் சரியாக ஒலிவாங்கியை (மைக்) பிடிக்க முடியாத அளவிற்கு கை நடுங்கிக்கொண்டே இருந்தது.
இதையும் படிக்க: ‘கலகல’வென வந்தாரா? மத கஜ ராஜா - திரை விமர்சனம்!
மேலும், பேசும்போதும் அமர்ந்திருந்தபோதும் விஷால் கண்ணீர் விட்டபடி இருந்தார். இதைக்கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில், நேற்று (ஜன. 11) மத கஜ ராஜா சிறப்புத் திரையிடலின்போது நிகழ்வில் பேசிய விஷால், “இந்த வெளியீட்டிற்காக நானும் சுந்தர் சியும் 12 ஆண்டுகள் காத்திருந்தோம். புரமோஷன் நிகழ்வில் பேசியபோது என் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அன்று எவ்வளவு பேர் என்னை நேசிக்கின்றனர், ஆதரவு கொடுக்கின்றனர் என தெரிந்துகொண்டேன்.
விஷால் நன்றாக இருக்கிறாரா? சரியாகி விட்டாரா? என பலரும் கேட்கின்றனர். 20 ஆண்டுகளில் நான் சம்பாதித்தது இதுதான். நான் எந்த மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதியாகவில்லை. நன்றாகத்தான் இருக்கிறேன். நான் விழுவேன் என நினைக்க வேண்டாம். என் தன்னம்பிக்கைதான் என் பலம். உங்கள் அன்பை எப்போதும் மறக்கமாட்டேன்.” எனக் கூறினார்.