முகப்பு
செய்திகள்

நடிகர் சைன் டாம் சாக்கோ விபத்தில் சிக்கினார்! தந்தை பலி!

நடிகர் சைன் டாம் சாக்கோவின் தந்தை விபத்தில் சிக்கியது பற்றி...

Updated On : 6 ஜூன் 2025, 9:58 am IST
நடிகர் சைன் டாம் சாக்கோ விபத்தில் சிக்கினார்
பகிர்:

நடிகர் சைன் டாம் சாக்கோவின் தந்தை கார் விபத்தில் வெள்ளிக்கிழமை காலை பலியானார்.

மேலும், நடிகர் சைன் டாம் சாக்கோ, அவரது தாய், சகோதரர் மற்றும் ஓட்டுநர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மலையாள நடிகரான சைன் டாம் சாக்கோ (41) தனது காரில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெங்களூர் நோக்கி வெள்ளிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தார்.

Advertisement

அந்த காரில் அவரது தந்தை சிபி சாக்கோ (70), தாய் மரியம் கார்லஸ் (60), சகோதரர் ஜோகோ சாக்கோ (36) ஆகியோர் உடன் பயணித்தனர். இந்த காரை கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த அனிஸ் (42) என்பவர் ஓட்டிச் சென்றார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பாறையூர் அடுத்த கொம்பநாயக்கணஹள்ளி தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற லாரி மீது இந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், நடிகரின் தந்தை சிபி சாக்கோ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநரை தவிர மற்ற மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது,

தகவலறிந்த பாலக்கோடு போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர்.

உயிரிழந்த சிபி சாக்கோவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

யார் இந்த டாம் சாக்கோ?

மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள சைன் டாம் சாக்கோ, உதவி இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.

தமிழில் பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சர்ச்சைகள்

கடந்த 2015-ஆம் ஆண்டு ஜன. 30-ஆம் தேதி கொச்சி காவல்துறையினர் கடவந்த்ரா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நடத்திய சோதனையின்போது, கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்த ஷைன் டாம் சாக்கோவையும் அவருடன் சேர்த்து மாடலிங் செய்து வந்த ரேஷ்மா, ப்ளெஸ்ஸி, டின்சி பாபு, சினேகா பாபு ஆகிய நான்கு பெண்களையும் கைது செய்தனர்.

இதனையடுத்து, போதைப்பொருள் பயன்பாடு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் 2 மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டனர். அதன்பின், 2015, மார்ச் மாதம் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

வழக்கின் விசாரணை கடந்த சுமார் பத்தாண்டுகளாக நடத்தப்பட்டு வந்த நிலையில், மேற்கண்ட 7 பேர் மீதும் குற்றச்சாட்டு போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாததால் அவர்கள் மீதான வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் கடந்த பிப். 11 உத்தரவிட்டது.

இதனிடையே, நடிகையிடம் போதையில் தவறாக நடந்துகொண்டதாக கடந்த ஏப்ரல் மாதம் குற்றச்சாட்டுக்கு உள்ளானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.