இயக்குநர் மாரி செல்வராஜ் தொடர் வெற்றிப்படங்களைக் கொடுத்திருக்கிறார்.
இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக இருந்த மாரி செல்வராஜ் சில வாழ்க்கை அனுபங்களை இதழ்களில் எழுதி கவனம் பெற்றார்.
பின், இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதல் படமாக பரியேறும் பெருமாள் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 2018-ல் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாரி செல்வராஜூக்கு பெரிய வெளிச்சத்தைக் கொடுத்தது.
தொடர்ந்து, கர்ணன், மாமன்னன், வாழை என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தார். வெறும் வணிக வெற்றி மட்டுமல்லாது, இவரின் கதைகளும் கருத்துகளும் சமூகத்தில் கவனம் பெற்றன.
இதனால், மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநரானார். தற்போது, பைசன் மூலம் மீண்டும் தமிழின் முன்னணி இயக்குநர் என்கிற பாராட்டுகளைப் பெற்று அசத்தியிருக்கிறார்.
பைசன் கபடி வீரரின் கதையாக அல்லாமல் தென் மாவட்டங்களில் நிகழும் சாதிய கலவரங்கள் மற்றும் படுகொலைகளைச் சுட்டிக்காட்டி அதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற விழைவும் மாரி செல்வராஜின் திரைக்கதையில் இருந்ததால் பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சினிமாவில் அரிதாகவே இப்படி தொடர் வெற்றிகளை ஓர் இயக்குநரால் கொடுக்க முடிகிறது. இந்தத் தலைமுறை இயக்குநர்களில் வணிகம் மற்றும் படைப்பு ரீதியாகவும் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநராகிவிட்டார் என்றே விமர்சகர்களும் ரசிகர்களும் மதிப்பிடுகின்றனர்.
இதன் மூலம், மாரி செல்வராஜ்ஜின் அடுத்த திரைப்படத்தின் மேல் பலருக்கும் ஆவல் எழுந்துள்ளது. நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகவுள்ளது.
இதையும் படிக்க: காளமாடனும் சாதிக் கலவரங்களும்... பைசன் - திரை விமர்சனம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.