பெரியார் வழியில் செல்வேன்... டியூட் இயக்குநர்!
டியூட் கதை குறித்து இயக்குநர் பேச்சு...
டியூட் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இப்படத்தின் கருத்து குறித்து பேசியுள்ளார்.
அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவான டியூட் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வணிக ரீதியாகவும் அசத்தியிருக்கிறது. நடிகர் பிரதீப் ரங்கநாதனும் ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்து நட்சத்திர நடிகராகியுள்ளார்.
இந்த நிலையில், இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வு சென்னையில் இன்று நடைபெற்றது.
நிகழ்வில் பேசிய டியூட் இயக்குநர் கீர்த்தீஸ்வரன், “டியூட் திரைப்படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இப்படம் ரூ. 100 கோடியை நெருங்கிவிட்டது என்பதே இதற்கு உதாரணம். என் அறிமுகமே சிறப்பாக அமைந்ததற்கு அனைவருக்கும் நன்றி. இப்படம் நிறைய விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. சொல்லாத விஷயங்களைச் சொன்னதாகக் கூறுகின்றனர்.
இது தமிழ்நாடு. இந்த மாநிலத்தில் நிறைய பெரியவர்கள் இருந்தனர். ஒரு பெரியாரும் இருந்தார். அவர்கள் சொல்லாததை நாங்கள் சொல்லவில்லை. அவர்களின் வழியில்தான் சென்று கொண்டிருக்கிறோம். இனி நான் இயக்கும் அடுத்தடுத்த திரைப்படங்களிலும் இதுபோன்ற கருத்துகளைச் சினிமா மொழியில் சொல்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: டியூட் மீது இளையராஜா வழக்கு தொடர திட்டம்?