நடிகர் சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படங்களைப் பயன்படுத்தத் தடை!
நடிகர் சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படங்களைப் பயன்படுத்தத் தடை விதிப்பு
ஹைதராபாத்: இணையதள ஆடை விற்பனையகங்கள், டிஜிட்டல் ஊடக அமைப்புகள், யூடியூப் சேனல்கள் மற்றும் இதர அமைப்புகள், நடிகர் சிரஞ்சீவியின் பெயரையோ, புகைப்படம், குரல் என எதையும் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தர்விட்டளள்து.
அண்மைக் காலமாக, இணையதளங்களில், தங்களது பெயர் உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி ஏராளமான திரைப் பிரபலங்கள் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற்றிருக்கும் நிலையில், தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிரஞ்சீவியும் தற்போது நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெற்றுள்ளார்.
இதுவரை, ரஜினிகாந்த், அமிதாப் பச்சான், அக்சய் குமார், ஹிருத்திக் ரோஷன், குமார் சானு, அர்ஜித் சிங், ஆஷா போன்ஸ்லே, ஐஸ்வர்யா பச்சான், அபிஷேக் பச்சான், கரன் ஜோஹர், அகினேனி நாகர்ஜுனா உள்ளிட்டோர் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
ஹைதராபாத் நகர நீதிமன்றத்தில், சிரஞ்சீவி தொடர்ந்த மனுவில், தன்னுடைய அடையாளம் மற்றும் புகழை, அதிகாரப்பூர்வமற்றவர்கள், வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சிரஞ்சீவியின் புகைப்படம், பெயர், அவரது அடையாளம், குரல் உள்ளிட்டவற்றை எந்த அமைப்பும் நிறுவனமும் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
பல ஆடை விற்பனையகங்கள் உள்ளிட்டவை, சிரஞ்சீவியின் அனுமதியின்றி, அவரது மெகா ஸ்டார், சிரு உள்ளிட்ட அடையாளப் பெயர்களையும் அவரது பெயர் மற்றும் குரல்களையும் தங்களது விளம்பரங்களுக்குப் பயன்படுத்தி வருகின்றன. இதுபோன்ற அதிகாரப்பூர்வமற்ற விளம்பரங்கள், தன்னுடைய சமூக மற்றும் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும், தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக இருக்கிறது என்றும் சிரஞ்சீவி கூறியிருந்தார்.