குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை!
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்காலத் தடை...
‘குட் பேட் அக்லி’ படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இசையமைப்பாளா் இளையராஜா சார்பில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், ”மைத்திரி மூவி மேக்கா்ஸ் தயாரிப்பில் நடிகா் அஜித் உள்ளிட்டோா் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் அண்மையில் வெளியானது.
Advertisement
இந்தப் படத்தில், ஒத்த ரூபாயும் தாரேன், இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்சக்குருவி ஆகிய பாடல்கள் இளையராஜாவின் அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளன. அனுமதியின்றி அவரது பாடல்களைப் பயன்படுத்துவது பதிப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது. எனவே அந்தப் பாடல்களை பயன்படுத்தத் தடை விதித்து, அவற்றை நீக்க வேண்டும்.
பாடல்களைப் பயன்படுத்தியதற்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.