எனக்கெல்லாம் ரசிகர்களா... நன்றி சொன்ன பிரதீப் ரங்கநாதன்!
எல்ஐகே நிகழ்வில் பிரதீப் ரங்கநாதன் பேச்சு...
நடிகர் பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய ரசிகர்கள் குறித்து பேசியுள்ளார்.
லவ் டுடே மூலம் தமிழ் சினிமாவின் திறமையான இயக்குநர் நடிகராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இது ஏதோ அதிர்ஷ்டத்தில் அமைந்துவிட்டது என இதற்கான பேச்சுகளும் இருந்தன. ஆனால், அடுத்தடுத்து பிரதீப் நடித்த டிராகன் ரூ. 150 கோடியையும் டியூட் ரூ. 130 கோடியும் வசூலித்து நட்சத்திர நடிகர் என்கிற அடையாளம் பிரதீப்புக்கு கிடைத்தது.
Advertisement
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஏகப்பட்ட ரசிகர்களை வைத்திருப்பதால் அதற்கான வணிகமும் விரிவடைந்துள்ளது. தற்போது, இவர் நடித்த எல்ஐகே திரைப்படம் வருகிற ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று (மார்ச் 7) சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் பேசிய பிரதீப் ரங்கநாதன், “நான் ஜென் -ஸி தலைமுறைகளுக்கான படத்தில் மட்டுமே நடிக்கிறேன் என்கிறார்கள். ஆனால், இந்தப்படம் எனக்கு புதிய முயற்சி. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.
நான் எப்போதும் என்னுடைய ரசிகர்கள் எனச் சொல்ல கூச்சப்படுவேன். காரணம், உனக்கெல்லாம் அதற்குள் ரசிகர்களா என யாராவது பேசுவார்கள். ஆனால், இப்போது நான் போகிற இடங்களிலெல்லாம் எனக்காக ரசிகர்கள் வந்து நிற்பதும், சமூக வலைதளங்களில் ஆதரவாக இருப்பதும் என உடன் நிற்கிறார்கள். இப்போது, சொல்கிறேன். என்னுடைய ரசிகர்களே... நீங்கள் இல்லாமல் நான் இல்லை. உங்கள் அனைவருக்கும் என் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.