முகப்பு
செய்திகள்

தீமா... தீமா... தேறுமா? பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே - திரை விமர்சனம்!

எல்ஐகே திரைப்படத்தின் விமர்சனம்....

Updated On : 10 ஏப்ரல் 2026, 4:54 pm IST
எல்ஐகே படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ்
பகிர்:

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான எல்ஐகே திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

வித்தியாசமான கதைகளில் நகைச்சுவை, உணர்வுப்பூர்வ விஷயங்களைப் பேசும் திரைப்படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன், எல்ஐகே திரைப்படத்தில் என்ன செய்திருக்கிறார்? கதை 2040-ல் சென்னையை மையமாக வைத்து நகர்கிறது. அந்த ஆண்டில் என்னென்ன தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இருக்கும் என்பதைக் காட்சியில் காட்டி, அந்தக் காலகட்டத்திற்குத் தயாராக வைக்கிறார். கதைநாயகன் பிரதீப் ரங்கதான் செல்போன்களே பயன்படுத்தாத பசுமை வகையறாவைச் சேர்ந்தவர். இன்னொரு பக்கம், நாயகி க்ரித்தி ஷெட்டி செல்போன் இல்லாமல் ஒருநொடியைக் கூட கழிக்க முடியாதவர். எப்போதும், லைக்ஸ், ஃபாலோ என வாழ்பவர்.

இப்படியான சூழலில் காதலர்களைச் சேர்த்து வைக்கும் செயலியாக எல்ஐகே (லவ் இன்ஸூரன்ஸ் கம்பெனி) செயல்படுகிறது. இதன் நிறுவனரான எஸ். ஜே. சூர்யா இளைஞர்களை முழுமையாகத் தன் கண்காணிப்பிலேயே வைத்திருக்கிறார். இந்தச் செயலியே ஒருவருக்கு இன்னொருவர் மீது காதல் இருக்கிறதா என்பதையும் கண்டறிந்து சொல்வதால் பலரும் இதனையே நம்புகின்றனர். அப்படியான தருணம் ஒன்றில் க்ரித்தி ஷெட்டி, பிரதீப் ரங்கநாதனைச் சோதனை செய்கிறார். அதில், அதிர்ச்சியான முடிவு வருகிறது. மனித உணர்வுகளைவிட செயலிகள் நம்பிக்கையானவையா? உண்மையானவையா? என்கிற கோணத்தில் அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் எல்ஐகேவில் சொல்ல முயன்றிருக்கின்றனர்.

Advertisement

Advertisement

தன் கடந்த படங்களை ஒப்பிட விக்னேஷ் சிவன் இப்படத்தில் உருவாக்க ரீதியாக தேர்ந்த இயக்குநராகியுள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரங்களை கதைக்கு ஏற்ப வடிவமைத்தது; தரமான விஎஃப்எக்ஸ் உள்ளிட்டவை விக்னேஷ் சிவன் இக்கதைக்காக மெனக்கெட்டதைக் காட்டுகிறது. ஒவ்வொரு ஃப்ரேமும் கண்ணில் ஒற்றும்படியாக இருக்க வேண்டுமென ஒளிப்பதிவாளர் ரவி வர்மனிடமிருந்து அட்டகாசமான காட்சிகளைப் பெற்றிருக்கிறார். ஆனால், திரைக்கதை மற்றும் ஒன்றாத உணர்வுப்பூர்வ தருணங்கள் அனைத்தும் சொதப்பிவிட்டன.

பிரதீப்பின் தந்தையான சீமான் செல்போனுக்கு எதிரான மனநிலை கொண்டவராக உள்ளார். அவருக்கும் மகனுக்கும் இடையேயான காட்சிகளும் அழுத்தமிக்கதாக இல்லை. அதேநேரம், இவ்வளவு வருத்தப்பட காதலி க்ரித்தியைக் காதலிக்க வைக்க பிரதீப் மேற்கொள்ளும் முயற்சிகளும் ஆங்காங்கே சிரிப்பை வரவழைத்தாலும் தேவையற்ற காட்சிகளால் அழுத்தமற்றவையாகவும் மாறுகின்றன. இதனால், பிரதீப் ரங்கநாதனுக்காக வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைவதையே காண முடிகிறது. ஆரம்பத்தில் இருந்த சிரிப்பு சத்தம் மெல்ல மெல்ல அடங்குகிறது. உணர்வுப்பூர்வமான வசனங்களும் கைகொடுக்கவில்லை.

பிரதீப்பின் கடந்த படங்களை ஒப்பிட இதுவே சுமார் ரகம். நடிப்பில் கொஞ்சம் ரசிக்க வைத்தாலும் உடல்மொழிகள் சலிப்பைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டதால் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியாக நடிப்பதை மாற்றிக்கொள்ளலாம். நல்ல கதைகளில் தன் பழைய பாணி நடிப்பை உடைக்க முயற்சி செய்யலாம்.

அழகாக இருக்கிறாள், ஆனால் பயமாக இருக்கிறது மாதிரியான கதாபாத்திரம் க்ரித்தி ஷெட்டிக்கு. பெரிய பாவனைகளெல்லாம் இல்லை. சாதாரணமாக, ரீல்ஸ் போடக்கூடிய ஆள்களிடம் உள்ள நடிப்புத் திறனே க்ரித்தியிடம் வெளிப்படுகிறது. கவர்ச்சியான காட்சிகளில் கவர்ச்சியாகவும் எமோஷனலான காட்சியில் கொஞ்சம் எமோஷனையும் கடத்துகிறார்.

எஸ். ஜே. சூர்யா வழக்கம்போல் படத்தைக் காப்பாற்றும் வில்லனாக நடித்துள்ளார். கிளைமேக்ஸில் கைதட்டு சத்தம் பெறக்கூடிய ஒரே ஆள் இவர்தான். “விஜய் பையன் இயக்கத்துல, அஜித் பையன் நடிச்சானே... அது என்ன படம்?” எனக் கேட்கும்போது விசிலலைதான். நாதக தலைவர் சீமான் நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சீமான் பேசும் ஒவ்வொரு வசனத்திற்கும் விசிலடிக்க திரையரங்கில் யாராவது இருப்பார்கள் என நினைத்தாவது இயக்குநர் கூடுதல் காட்சிகளில் சீமானைப் பயன்படுத்திருக்கலாம்.

பல ஆண்டுகளாக ரசிகர்களின் விருப்பான பாடலென இருந்த, ‘எனக்கென யாரும் இல்லையே’ பாடலை இப்படத்திற்காக அனிருத் கொடுத்துவிட்டார். ரசிகர்களுக்கு நாஸ்டால்ஜியாவாக அமைந்திருக்கும். தீமா தீமா பாடலும் ரசிக்கும்படியாக இருந்தது. இதனைவிட ரோபோ ஒன்றிற்கு அனிருத் குரல் பலமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் ரவி வர்மனின் அசத்தலான ஒளிப்பதிவால் படத்தின் தரமே அதிகரித்துவிட்டது.

ஆனால், கதையும் திரைக்கதையும் தருணங்களைக் கைவிட்டு, கதையைச் சொல்ல வேண்டுமென்கிற அவசரத்தில் செல்வதால், சுமாரான படம் என்கிற அளவுடனே எல்ஐகே நின்றும் விடுகிறது. இன்னும் கூடுதலாக கதை, திரைக்கதையில் விக்னேஷ் சிவன் கவனம் செலுத்த வேண்டும். டிரெண்டில் இருக்கும் இன்ஸ்டா பிரபலங்களைக் கதைக்குள் கொண்டு வருவது; நகைச்சுவை என்கிற பெயரில் ஏதாவது மொக்கை செய்வது எல்லாம் பலம் அல்ல, பலவீனமானவை என்பதை உணர்ந்து அடுத்த படத்தில் குறையைக் களையலாம்.

summary

actor pradeep ranganathan's lik movie released in worldwide today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.