நடிகர் ரவி மோகன் தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படத்தின் உரிமத்தை பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
நடிகர் ரவி மோகன் தயாரித்து நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் யோகி இயக்குகின்றார். இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, அர்ஜுன் அசோகன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்தப் புதிய படத்திற்கு, “ப்ரோ கோட்” எனப் பெயரிடப்பட்டிருந்த நிலையில் அந்தப் பெயரின் உரிமம் தங்களுடையது எனக் கோரி தில்லியைச் சேர்ந்த பிரபல மதுபான நிறுவனம் ஒன்று வழக்குத் தொடர்ந்தது.
இதனைத் தொடர்ந்து, ஒரே பெயரை வணிக ரீதியாகப் பயன்படுத்துவது விதிமீறலாகத் தெரிவதாகக் கூறிய தில்லி உயர் நீதிமன்றம் வழக்கு முடியும் வரையில் திரைப்படத்தின் விளம்பரங்கள் மற்றும் வெளியீட்டிற்கு ப்ரோ கோட் என்ற பெயரைப் பயன்படுத்த தடை விதித்தது.
இதன்பின்னர், ரவி மோகன் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில், ப்ரோ கோட் திரைப்படத்தின் பெயரைப் பயன்படுத்த மதுபான நிறுவனம் தடுக்கக் கூடாது என்று கடந்த நவம்பர் மாதம் இடைக்கால உத்தவைப் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், ரவி மோகன் தயாரிக்கும் இந்த முதல் படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக, அதிகாரப்பூர்வமாக இன்று (ஜன. 15) அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இருப்பினும், படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் திரைப்படத்தின் பெயர் இடம்பெறவில்லை. இதனால், படத்தின் பெயர் குறித்து குழப்பமடைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.