சிறை - உண்மையான காதலர்கள் என்ன ஆனார்கள்? தமிழ் பதில்!
சிறை குறித்து இயக்குநர் தமிழ்...
உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட சிறை குறித்து படத்தின் கதாசிரியர் இயக்குநர் தமிழ் பேசியுள்ளார்.
இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு, அக்ஷய் குமார், அனிஷ்கா உள்ளிட்டோர் நடித்த சிறை திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று, ரூ. 32 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது.
இதில், காதலர்களாக நடித்த கதாபாத்திரங்கள் உண்மையான மனிதர்கள் என படத்தின் கதாசிரியர் இயக்குநர் தமிழ் தெரிவித்திருந்தார்.
Advertisement
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் தமிழ், “நான் வேலூர் சிறைச்சாலையிலிருந்து கைதிகளை நீதிமன்றம் அழைத்துச் செல்லும் பொறுப்புக் காவலராக இருந்தபோதுதான் உண்மையான காதலனை அழைத்துச் சென்றேன். அவர் ஹிந்து. நீதிமன்றத்தில் அப்பையனைக் காண அவனுடைய காதலி வந்தார். 5 ஆண்டுகளாக இப்படியே ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
எப்படியாவது அவர்களை நீதிபதியிடம் பேச வைக்க வேண்டும் என முயற்சித்தேன். ஆனால், அதற்குள் எனக்கு பணியிட மாற்றம் கிடைத்துவிட்டது. என் நண்பரிடம் அப்பையன் குறித்து சொல்லிவிட்டு வந்தேன். ஆனால், பணி அழுத்தங்களால் அந்தக் காதலர்களை மறந்துவிட்டேன். உண்மையான அந்த காதலர்கள் என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லை” என்றார்.