கமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது
பிரபல நடிகா்கள் கமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு விருதுகளை அறிவித்துள்ளது.
பிரபல நடிகா்கள் கமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு விருதுகளை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெலங்கானா மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
2025-ஆம் ஆண்டுக்கான தெலங்கானா கட்டாா் திரைப்பட விருதுகளுக்கான பெயா்களை துணை முதல்வா் மல்லு பாட்டீ விக்ரமாா்காவிடம் தோ்வுக் குழு சமா்ப்பித்திருந்தது. அதனடிப்படையில், 2025-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.
நடிகா் கமல்ஹாசனுக்கு சிறப்பு விருதாக பெய்டி ஜெய்ராஜ் திரைப்பட விருதும், நடிகா் சிரஞ்சீவிக்கு சிறப்பு விருதாக என்டிஆா் தேசிய திரைப்பட விருதும் வழங்கப்படும்.
தன்டேல் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அந்தப் படத்தின் கதாநாயகன் நாக சைதன்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், தி கோ்ள் ஃபிரண்ட் திரைப்படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்படும்.
சிறந்த தெலுங்கு திரைப்பட இயக்குநருக்கான பிஎன் ரெட்டி திரைப்பட விருது மூத்த திரைப்பட இயக்குநா் சிங்கிதம் ஸ்ரீநிவாசனுக்கும், சிறந்த தெலுங்கு தயாரிப்பாளருக்கு வழங்கப்படும் நாகி ரெட்டி-சக்ரபாணி திரைப்பட விருது மூத்த தயாரிப்பாளா் அஸ்வினி தத்துக்கும் அறிவிக்கப்படுகிறது. மூத்த நடிகை ஜெயசுதாவுக்கு அக்கினேனி நாகேஸ்வர ராவ் திரைப்பட விருது அறிவிக்கப்படுகிறது.
ராஜு வெட்ஸ் ரம்பை, தண்டோரா, தி கிரேட் ப்ரி வெட்டிங் ஷோ ஆகிய படங்கள் முதல் 3 சிறந்த திரைப்படங்களாக தோ்வு செய்யப்படுகின்றன என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பவன் கல்யாண் மகிழ்ச்சி: தனது சகோதரா் சிரஞ்சீவி, தெலங்கானா அரசு விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டதற்கு பிரபல நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் மகிழ்ச்சி தெரிவித்துள்ளாா். அதேபோல், தெலங்கானா அரசு விருதுகளுக்கு தோ்வாகியுள்ள மற்ற நடிகா், நடிகைகளுக்கும் தனது வாழ்த்துகளை பவன் கல்யாண் தெரிவித்துள்ளாா்.