கட்டுரைகள்

உயிரோவியமே! வருக...வருகவே...!

தமிழில் பக்தி இலக்கியங்கள் தோன்றியிராவிட்டால், தமிழ் இலக்கியங்களுக்கு எந்தவிதப் பெருமையும் கிடையாது. பக்தி இலக்கியங்களே மற்ற தமிழ் இலக்கியங்களை வளரச்செய்து, இன்றளவும் நின்று, நிலைத்திருக்க உதவின என்பத

இடைமருதூர் கி.மஞ்சுளா

தமிழில் பக்தி இலக்கியங்கள் தோன்றியிராவிட்டால், தமிழ் இலக்கியங்களுக்கு எந்தவிதப் பெருமையும் கிடையாது. பக்தி இலக்கியங்களே மற்ற தமிழ் இலக்கியங்களை வளரச்செய்து, இன்றளவும் நின்று, நிலைத்திருக்க உதவின என்பது யாராலும் மறுக்கவியலாத உண்மை.

  20-ஆம் நூற்றாண்டில் பக்தி இலக்கியம் தழைத்தோங்கச் செய்தவர்களுள் ஈடு இணையற்ற பாவலராகத் திகழ்ந்தவர் குமரகுருபர சுவாமிகள். தமிழும் சைவமும் தரணியில் ஒருசேரத் தழைத்தோங்க, தனிப்பெருந் தொண்டாற்றிய தவநெறிச் செல்வர்.

  ஐந்து வயது வரை ஊமைக் குழந்தையாகவே இருந்த குமரகுருபரரை அவரது பெற்றோர், திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கோயில் கொண்டிருக்கும் செந்திலாண்டவரின் அருளால் இவர் பேசும் ஆற்றல் பெற்றார். ஆற்றல் பெற்ற அந்நொடியிலேயே "தமது செவ்விதழைத் திறந்து "கந்தர் கலிவெண்பா' பாடி முருகனை வாழ்த்தினார். இதுதான் இவரது இளம் வயதில் முருகன் நிகழ்த்திய அற்புதத் திருவிளையாடல். முன்பு இவர் வைகுண்டத்தில் இருந்தவர் என்று ஒருசாரார் கூறுவர்.

  திருச்செந்தில் ஆண்டவன் அருளால் பாடத் தொடங்கிய குமரகுருபரர், இளம் வயதிலேயே ஞானம் கைவரப்பெற்று, மதுரை, சிதம்பரம் போன்ற பல திருத்தலங்களுக்குச் சென்று அங்கு குடிகொண்டிருக்கும் கடவுளர்களைப் பாடிப்பரவினார். அப்போது அரசாண்டு வந்த தில்லிப் பேரரசரின் அன்பையும் ஆதரவையும் பெற்றார். அவர்தம் துணையோடு காசியில் குமாரசாமி மடம் ஒன்றை நிறுவினார்.

  காசியில் குமரகுருபரரின் கருத்துச் செறிவான சொற்பொழிவுகளை, வடமொழிக் கவிஞர் துளசிதாசர் மிகவும் விருப்பமோடு கேட்டார் என்று கூறுவர் சான்றோர். பக்தி இலக்கியத்திற்கு இவர் நல்கிய பங்கு அளவிடற்கரியது.

  கந்தர் கலிவெண்பா, மீனாட்சி பிள்ளைத்தமிழ், முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், காசிக் கலம்பகம், நீதிநெறி விளக்கம் திருவாரூர் நான்மணிமாலை, சிதம்பர மும்மணிக்கோவை, சகலகலாவல்லி மாலை முதலிய அரிய பல பாமாலைகளை இயற்றி பூமாலையாக்கிச் சாற்றியுள்ளார்.

  இவர் பைந்தமிழில் தமிழ் மொழியை, "கலைத் தமிழ்த் தீம்பாலமுதம்', "மும்மைத் தமிழ்', "சொற்சுவை பழுத்த தொகைத்தமிழ்', "தீஞ்சுவைக் கனியும் தண்தேன் நறையும் வடிவெடுத்த சாரங்கனிந்து ஊற்றிருந்த பழந்தமிழ்' என்று பலவாறு புகழ்ந்துள்ளது தமிழ்மொழியின் சிறப்பையும், சீர்மையையும் எடுத்தியம்புகிறது.

  கற்பனைச் சொற்கோலங்களுக்கு இவரது கவிதைகள் களம் அமைத்துக் கொடுத்திருப்பதை இவரது படைப்புகளில் ஆங்காங்கே படித்து அகமகிழ்ந்து இன்புறலாம்.

  பிள்ளைத்தமிழ் இலக்கியங்களுள் எல்லாம் முதன்மை பெற்றுத் திகழ்வது இவர் இயற்றிய "மீனாட்சி பிள்ளைத்தமிழ்'. முதன்மைபெற்றுத் திகழ்வது மட்டுமல்லாமல், பிள்ளைத் தமிழ் இலக்கியங்களுக்கே பெருமை சேர்க்கிறது இப்பிள்ளைத் தமிழ். அதற்குக் காரணம் என்ன? அதில் மட்டும் அப்படி என்ன அற்புதம் நிகழ்ந்தது? இந்தக் கேள்விகளுக்கு சொக்கநாதனின் மனங்கவர் மனையாட்டியான அம்மை மீனாட்சியே, குமரகுருபரரின் செந்தமிழ்ப் பாக்களைக் கேட்க சிறுநடையிட்டு வந்தாள் என்பதுதான் இதன் தனிச்சிறப்பு.

  96 வகை சிற்றிலக்கியங்களுள், அந்தாதிக்கு அடுத்து புகழ்பெற்றுத் திகழ்வது பிள்ளைத்தமிழ் இலக்கியம். தமக்குப் பிடித்த தெய்வங்கள், பாட்டுடைத் தலைவன் அல்லது பாட்டுடைத் தலைவியை, குழந்தையாய் பாவித்து இயற்றப்படும் சிற்றிலக்கியமே பிள்ளைத்தமிழ். இதைப் "பிள்ளைப்பாட்டு' எனவும் கூறுவர். இதனைக் குழந்தையின் மூன்றாம் திங்கள் முதல், இருபத்தோராம் திங்கள் வரை வரும் ஒற்றித்த திங்கள் பத்தினும் கூறுவதாக அமைப்பர்.

  பிள்ளைத் தமிழ் - ஆண்பால் பிள்ளைத் தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும். ஆண்பாற் பிள்ளைத்தமிழில், காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில் சிதைத்தல், சிறுபறை முழங்கல், சிறுதேர் உருட்டல் ஆகிய பத்து பருவங்கள் இடம்பெறும். பெண்பாற் பிள்ளைத் தமிழில் ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்குரிய முதல் ஏழு பருவங்கள் இருக்க, அம்மானை, நீராடல், ஊசல் ஆகிய பெண்களுக்குரிய பருவங்கள் காணப்படும். இதுவே பிள்ளைத் தமிழின் இலக்கணமாகும்.

  "குழவி மருங்கினும் கிழவதாகும்' என்ற தொல்காப்பியர் வரி பிள்ளைத் தமிழ் இலக்கியத்திற்கு அடிப்படை எனலாம். இது வளர வழிவகுத்தவர் பெரியாழ்வார் ஆவார். அவர்தம் பாசுரங்களில் கண்ணனைத் தாலாட்டி, செங்கீரையாட்டி, சப்பாணி கொட்டி, தளர்நடை இடுதலை எழிலுறப் பாடியுள்ளார். "மன்னுபுகழ் கோசலை' எனத் தொடங்கும் பாடலில் ராகவனைத் தாலாட்டி மகிழ்கிறார் பெரியாழ்வார்.

  காலத்தால் முற்பட்டது, ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட "குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்' தான். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளைத்தமிழ் நூல்கள் எழுதப்பட்டுள்ளன. என்றாலும் மீனாட்சி பிள்ளைத் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அப்படி என்னச் சிறப்பு? காண்போம்.

  இந்நூல் திருமலைநாயக்கர் முன்னிலையில் அவரது வேண்டுகோளுக்கிணங்க குமரகுருபரரால் அரங்கேற்றப்பட்டது. அரங்கேறிக் கொண்டிருந்த வேளையில், ஆறாவது பருவமான "வருகை'ப் பருவத்தின் 9-வது பாடலான "தொடுக்கும் கடவுள்' என்ற பாடலைப் குமரகுருபரர் பாடியபோது அதிலிருந்த சொற்சுவை, பொருட்சுவைகளைக் கேட்டு மயங்கிய மீனாட்சியம்மை, சிறுமிபோல் வடிவெடுத்து, தளர் நடையிட்டு வந்தாள்... குமரகுருபரரின் தேன்தமிழில் தன்னை மறந்தாள்...அவரது மடிமீது ஏறி அமர்ந்து பிற பாடல்களையும் கேட்டு இன்புற்றாள் என்பது வழிவழியாக வழங்கிவரும் செய்தி! ஆம்! இதைவிட இப்பிள்ளைத் தமிழின் சிறப்பையும், மேன்மையையும் சொல்லவும் வேண்டுமோ?

  "அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி' என்று வேதங்களால் போற்றப்படும் அன்னை ஸ்ரீ மீனாட்சியைத் தளர் நடையிட்டு வரச்செய்த அப்பாடல் இதுதான். படிக்கப் படிக்கத் திகட்டாத தேன்தமிழ் பாமாலை.

  ""தொடுக்கும் கடவுள் பழம் பாடல்

  தொடையின் பயனே நறைபழுத்த

  துறைந்தீந் தமிழின் ஒழுகுநறுஞ்

  சுவையே அகந்தைக் கிழங்கை அகழ்ந்து

  எடுக்கும் தொழும்பர் உளக் கோயிற்கு

  ஏற்றும் விளக்கே வளர்சிமய

  இமயப் பொருப்பில் விளையாடும்

  இளமென் பிடியே எறிதரங்கம்

  உடுக்கும் புவனம் கடந்து நின்ற

  ஒருவன் திருவுள்ளத்தில் அழகு

  ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்

  உயிரோ வியமே... மதுகரம்வாய்

  மடுக்கும் குழல்காடேந்தும் இள

  வஞ்சிக் கொடியே வருகவே!

  மலயத் துவசன் பெற்ற பெரு

  வாழ்வே! வருக... வருகவே...!''

  குமரகுருபரரின் புலமைக்குக் கட்டியம் கூறும் நூல் மீனாட்சி பிள்ளைத்தமிழ் மட்டுமல்ல, அந்தாதி என்னும் கலம்பக உறுப்பில் பாடப்பட்ட "மதுரைக் கலம்பகம்' என்ற நூலும்தான். அதில், "இறைவன் வென்றான்' என்கிறாள் ஒருத்தி. மற்றொருத்தி, "வெற்றிபெற இறைவனின் உடல் இரண்டு கூறுகளாகிவிட்டனவே, ஏன்?' எனக் கேட்கிறாள். அதற்கு மூன்றாமவள்,

  ""இருவருக்கும் காண்பரிய ஈசர்மது சேரனார்

  விருதுகட்டி அங்கம் வெட்டி வென்றான்காண் அம்மானை

  விருதுகட்டி அங்கம்வெட்டி வென்றனரே யாமாகில்

  ஆனாலும் காயமில்லை ஐயரவர்க் கம்மானை''

  என்கிறாள். "உடல் இரு கூறானாலும் அதில் காயம் (தழும்பு) இல்லை' எனக் கூறுகிறாள். இத்தகைய தெய்வீகக் கற்பனைகளைத் திறம்படப் பாடுவதில் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றித் திகழ்கிறார் குமரகுருபர சுவாமிகள். ஒவ்வொரு தமிழரும் படித்து, சுவைத்து, இன்புற வேண்டிய பிள்ளைத் தமிழ் "மீனாட்சி பிள்ளைத் தமிழ்'. அவ்வாறு படித்து, சுவைக்காதவர்கள் பிறவிப் பயனை எய்துதல் அரிதினும் அரிதாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகை

நிலக்கரிச் சுரங்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிா்காலத்தை பாதுகாக்க வேண்டும்: மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி

அனில் அம்பானி வங்கிக் கணக்குகளை மோசடி என அறிவிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை: ரத்து செய்த உயா்நீதிமன்றம்

சிதம்பரம் நகராட்சியில் ரூ.400 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

வில்பட்டி ஊராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT