முகப்பு
கட்டுரைகள்

ஊழலுக்கு எதிரான வெளிச்சக் கீற்று

ஊழலுக்கு எதிராக வீதிக்கு வந்து போராடுவது என்பது உண்மையிலேயே இந்தியாவுக்குப் புதிய விஷயம்.  லஞ்ச ஊழலைச் சகிக்க முடியாமல் இதுவரை வெறும் புலம்பலைத்தான் இந்தியனால் வெளிப்படுத்த முடிந்தது. மிஞ்சிப்போனால் ப

Updated On : 20 செப்டம்பர், 2012 at 8:07 AM
பகிர்:
Updated On : 28 டிசம்பர், 2023 at 11:19 PM

ஊழலுக்கு எதிராக வீதிக்கு வந்து போராடுவது என்பது உண்மையிலேயே இந்தியாவுக்குப் புதிய விஷயம்.

 லஞ்ச ஊழலைச் சகிக்க முடியாமல் இதுவரை வெறும் புலம்பலைத்தான் இந்தியனால் வெளிப்படுத்த முடிந்தது. மிஞ்சிப்போனால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் புகார் கொடுத்திருக்கலாம். ஆனால், கூட்டம் கூட்டமாகப் போராட்டம் நடத்துவதை புதிய எழுச்சி என்றே சொல்லலாம்.

 லோக்பால் மசோதாவை வலியுறுத்தி அண்ணா ஹசாரே தொடங்கிவைத்த சிறு பொறி, இன்று பாபா ராம்தேவின் உண்ணாவிரதம் மூலம் பெரு நெருப்பாக பரவத் தொடங்கியுள்ளது.

Advertisement

 வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்க வேண்டும்; ஊழலை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி ராம்தேவ் மேற்கொண்ட உண்ணாவிரதத்துக்கு இந்தியா முழுவதும் பலத்த ஆதரவு.

 தமிழகத்திலும் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, கன்னியாகுமரி உள்பட 16 நகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

 ஆனால், ராம்தேவின் போராட்டத்தைச் சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்ட மத்திய அரசின் நடவடிக்கைகள் அருவருக்கத்தக்கவை.

 இந்தியாவில் வறுமை எந்த அளவுக்கு முக்கியமான பிரச்னையோ அந்த அளவுக்கு ஊழலும் முக்கியமானது. இங்கு ஊழல் செய்து, வரிஏய்ப்பு செய்து சம்பாதித்த கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கிவைத்துள்ளனர் பண முதலைகள்.

 சுவிஸ் வங்கிகளில் மட்டும் சுமார் 80 லட்சம் கோடி அளவுக்கு இந்தியர்களின் கறுப்புப் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாம். இதில் உலகிலேயே இந்தியாதான் முதலிடம்.

 அடுத்தபடியாக உள்ள ரஷியா, இங்கிலாந்து, உக்ரைன், சீனாவெல்லாம் நம்மை நெருங்கவே முடியாத அளவுக்கு இந்தியர்களின் கறுப்புப் பணம் அதிகம்.

 இந்தப் பணம் இந்தியாவின் வெளிநாட்டுக் கடனைவிட 13 மடங்கு அதிகமாம். இந்தப் பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டால் இந்தியாவின் கடனை 24 மணி நேரத்தில் தீர்த்துவிடலாம். ஒவ்வோர் இந்தியனுக்கும் ரொக்கமாக ரூ.50 ஆயிரம் கொடுக்கலாம்.

 இது போதாதென்று இப்போது ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் என இந்தியாவின் "பெருமையை' உலக அளவில் பரப்பிக் கொண்டிருக்கின்றனர் நம் அரசியல்வாதிகள்.

 லஞ்சம் வாங்குபவர்களை, ஊழல் செய்பவர்களை மட்டும் குறைசொல்வதில் அர்த்தம் இல்லை. லஞ்சம் கொடுத்தாவது "காரியத்தை' முடிக்க வேண்டும் என்ற எண்ணமும் நம் மக்களின் ரத்தத்தோடு ஊறிப்போய்விட்டது.

 "டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல்' அமைப்பு நடத்தியுள்ள ஓர் ஆய்வின்படி, 15 சதவீதத்துக்கும் அதிகமான இந்தியர்கள் லஞ்சம் கொடுத்து அல்லது ஏதாவது ஒரு "செல்வாக்கை'ப் பயன்படுத்தி அரசு அலுவலகங்களில் காரியத்தைச் சாதிக்கின்றனராம். ஊழல் தொடர்பான புள்ளிவிவரங்களில் இந்தியா ஒளிர்வது வேதனைக்குரியது.

 ஆனால், இப்போது நிலைமை மாறி வருகிறது. ஊழலுக்கு எதிரான மக்களின் கோபம் போராட்டமாக வெளிப்படுகிறது. ஆனால், இது ஊழலுக்கு எதிரான போராட்டமாக மட்டும் நின்றுவிடாமல் அநியாயங்களுக்கு எதிரான போராட்டமாக வளர்ச்சி பெற வேண்டும்.

 ஊழலுக்கு எதிரான போராட்டம், கல்விக் கொள்ளைக்கு எதிராகவும் திரும்ப வேண்டும்.

 அனைத்து அரசு அலுவலகங்களிலும், "இங்கு லஞ்சம் கேட்டால் புகார் செய்ய வேண்டிய தொலைபேசி எண், முகவரி' என வெளிப்படையாகத் தெரியும்படி எழுதிவைக்க வேண்டும்.

 லஞ்சம் வாங்கிப் பிடிபடுவோருக்குத் தண்டனை வாங்கிக்கொடுக்க காவல்துறையை விரைவாகச் செயல்பட வைக்க வேண்டும்.

 மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் கிராம வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.6 லட்சத்தை ஊழல் செய்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.

 இதுபோன்ற வன்செயல்கள் வரவேற்கத்தக்கவை அல்ல என்றாலும், பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மக்களின் கோபம், ஓரளவுக்கு மேல் எப்படி வெளிப்படும் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

 இப்போது ஏற்பட்டுள்ள ஊழலுக்கு எதிரான எழுச்சி மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஊழலை இந்தியாவிலிருந்து விரட்டி அடித்துவிடலாம் என்ற வெளிச்சக் கீற்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.