வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
வைத்தீஸ்வரன்கோயில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு பற்றி..
வைத்தீஸ்வரன்கோயில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான மக்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் தர்மபுர ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. நவக்கிரகங்களில் முதன்மையான செவ்வாய் ஸ்தலமாகவும், முத்துகுமார சுவாமி, தன்வந்திரியும் தனிச் சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலின் சித்திரை மாத திருவிழாவின் முக்கிய நிகழ்வான நகரத்தார் குலதெய்வ வழிபாடு நடைபெற்று வருகிறது.
காரைக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர்,ஒரத்தநாடு, கந்தர்வகோட்டை, பேராவூரணி, கீழசீவல்பட்டி, பரமகுடி,திருச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான நகரத்தார் மக்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி தங்கள் குல தெய்வ வழிபாட்டை நிறைவேற்றி வருகின்றனர். ஆண்டு தோறும் சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை பாதயாத்திரையாக வந்து தங்கள் குலதெய்வமான தையல்நாயகியை வழிபடுவது வழக்கம்.
Advertisement
சித்திரை மாதம் முதல் செவ்வாய் அன்று தங்கள் வேண்டுதல் நிறைவேற வீட்டில் மஞ்சள் தடவிய குச்சியை வைத்துப் பூஜித்து பாதயாத்திரை துவங்கும் மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக அந்த குச்சியை கோயில் கொடிமரத்தில் செலுத்துகின்றனர். பின்னர் அம்பாள் மற்றும் சுவாமியை தரிசித்து வழிபடும் நகரத்தார் மக்கள் தங்களுடைய புதிய வேண்டுதலுக்காகக் கொடிமரத்திலிருந்து மாற்றுக் குச்சியை எடுத்துச் செல்வதும் இம்மக்களின் வழக்கமாக உள்ளது. மேலும் பக்தர்கள் வசதிக்காக வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சிறப்புப் பேருந்துகள் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது.