தேசத்தைச் சீரழிக்கும் லஞ்சம்!
அரசியல்வாதிகள் பலர் லஞ்ச ஊழல் புகாரில் சிக்கி சிறைகளில் வாடி வரும் நிலையில், நாங்களும் அவர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் அரசு ஊழியர்கள் பலரும் லஞ்சம் வாங்குவதைத் தங்களின் வாழ்நாள் லட்சியமாகவே
அரசியல்வாதிகள் பலர் லஞ்ச ஊழல் புகாரில் சிக்கி சிறைகளில் வாடி வரும் நிலையில், நாங்களும் அவர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் அரசு ஊழியர்கள் பலரும் லஞ்சம் வாங்குவதைத் தங்களின் வாழ்நாள் லட்சியமாகவே கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இதில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் என்ற பாகுபாடு எதுவும் கிடையாது.
மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை எந்தவொரு காரியம் என்றாலும் கண்டிப்பாக இவ்வளவு கொடுத்தால்தான் விரைவாக வேலை முடியும் என்ற நிலை நாடு முழுவதுமே காணப்படுகிறது.
வாரிசுச் சான்று பெறுவதற்கு வட்டாட்சியர் அலுவலகம் சென்றாலும், வாகன ஓட்டுநர் உரிமம் பெற வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சென்றாலும், குடிநீர் இணைப்புப் பெறுவதற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சென்றாலும், புதிய மனைகள் வாங்கி அதனை சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யச் சென்றாலும் சரி, அங்கெல்லாம் படிவங்கள் முறையாக நிரப்பப்பட்டுள்ளதா, தேவையான சான்றுகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கும் அலுவலர்களைவிட "இணைக்கப்பட வேண்டிய விஷயம்' சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கும் அலுவலர்கள்தான் அதிகமாக உள்ளனர்.
முன்பெல்லாம், முறையான ஆவணங்கள் இல்லாத நிலையில் அதைச் சரிக்கட்டுவதற்காகவும், ஒரு மேஜையிலிருந்து மற்றொரு மேஜைக்கு கோப்பை நகர்த்துவதற்காகவும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒவ்வொருவரையும், சந்தித்து மிகச் சிரமப்பட்டு லஞ்சம் கொடுத்து காரியத்தை முடிக்க வேண்டிய நிலை இருந்தது. இந்தச் சங்கிலித் தொடரில் லஞ்சம் வாங்காத சில நல்லவர்கள் இருந்தால் அந்தக் காரியம் நிறைவடையாமலேயே போய்விடும் வாய்ப்பும் இருந்தது.
ஆனால், இப்பொழுதெல்லாம் முறையான ஆவணங்கள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மால் (லஞ்சம்) வெட்டினால்தான் காரியம் முடியும் என்ற நிலையே உள்ளது.
அதுவும் ஒவ்வொரு மேஜையாக நாம் அலைய வேண்டிய அவசியம் எதுவும் இல்லாமலேயே, குறிப்பிட்ட தொகையை கடைநிலை ஊழியரிடம் கொடுத்துவிட்டால், நமது காரியம் நம்மைத் தேடி வீட்டுக்கே வந்துவிடும்.
இப்படி, மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் தங்கியிருக்கும் லஞ்சப்பேய், பள்ளி மாணவர்களையும் விட்டுவைக்கவில்லை என்பதுதான் வேதனை.
ஸ்காலர்ஷிப்புக்காக (உதவித்தொகை) வருமானச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் என வரும் மாணவர்களிடமும் தங்களின் கைவரிசையைக் காட்டச் சில அலுவலர்கள் தயங்குவதில்லை.
இதனால் எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் மனதிலும் இந்த மாயக்கலை பதிவாகிவிடும் நிலையுள்ளது. பசுமரத்தாணிபோல் இந்த லஞ்சம் மாணவர்களின் மனதிலும் மெல்ல மெல்ல விதைக்கப்பட்டு வருகிறது என்றால் அது மிகையில்லை.
சரி, கையூட்டுப் பெறும்போது கையும், களவுமாகப் பிடிபட்டுவிட்டாரே. இனி அவருக்கு வேலை தொலைந்தது. சிறையில் கம்பி எண்ணுவார். இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என நினைத்து மகிழ்ந்திருந்தால், நமது மகிழ்ச்சிக்குப் பூட்டுப்போடும் விதமாக சில நாள்களிலேயே அவர் கம்பீரமாக அலுவலகத்துக்கு வந்து இறங்குவார். இது லஞ்சம் வாங்கும் மற்றவர்களுக்கும் தானாகவே உந்துதலை ஏற்படுத்தும்.
இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக, அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் அவர்களுக்குக் கடும் தண்டனை விதிப்பதுடன், ஓய்வு பெற்றிருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது, மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களுக்குக் கட்டாய ஓய்வளிக்கவும், அதையும் தாண்டி அவர்களின் ஓய்வூதியத்தில் 10 முதல் 20 சதவிகிதம் வரை நிரந்தரமாகக் குறைக்கவும் மத்திய அமைச்சர்கள் குழு முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது.
மேலும் ஊழல் வழக்குகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுப்பது குறித்தும் அமைச்சர்கள் குழு முடிவு செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 2,400-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இனி 3 மாதங்களுக்குள் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கவும் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவு மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெறும் என்ற நிலையில், அரசின் முடிவுகளை எல்லாம் உடனடியாகச் செயல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லையேல், லஞ்சப் பேய் இந்தத் தேசத்தைச் சீரழித்து விடும்.