அமிலமும் ஆண்களும்
எத்தனையோ பெண்களைத் தினமும் சந்திக்கிறேன். கிராமத்துப் பெண், நகரத்துப் பெண், மஞ்சள் பூசிய பெண், "மாய்ஸ்சரைசர்' பூசிய பெண்,
எத்தனையோ பெண்களைத் தினமும் சந்திக்கிறேன். கிராமத்துப் பெண், நகரத்துப் பெண், மஞ்சள் பூசிய பெண், "மாய்ஸ்சரைசர்' பூசிய பெண், வெற்றிலை உதட்டுப் பெண், "லிப்ஸ்டிக்' பெண், தாவணிப் பெண், சிற்றாடைப் பெண், பட்டிக்காட்டுப் பெண், நவநாகரிகப் பெண், வயல் பெண், பூக்காரப் பெண், படிக்கும் பெண், நடிக்கும் பெண், பாடும் பெண், ஆடும் பெண், கவிதைப் பெண், பேச்சுப் பெண், எழுத்துப் பெண், அரசியல் பெண், காதலிக்கும் பெண், காதலை மறுக்கும் பெண், கூட்டுக் குடும்பத்துப் பெண், தனித்த பெண், காதலைக் காதலிக்கும் பெண், காதலை வெறுக்கும் பெண் - எல்லோரையும் நிறையவே சந்திக்கிறேன் பலப்பலப் பொழுதுகளில், பலப்பல நிகழ்வுகளில்.
எல்லோருக்குள்ளும் நான் புரிந்துகொள்வது ஒன்றுதான்; எல்லோருக்குள்ளும் நான் உணர்வது ஒன்றுதான் - எப்படியேனும் வாழ்வில் ஜெயிக்க வேண்டும், எப்படியேனும் தனது புன்னகையைத் தக்கவைக்க வேண்டும் என்பதே அது.
எல்லோருக்குள்ளும் ஒளிந்திருக்கிறது ஒரு பொதுவான அம்சம் - அவர்கள் பெண்கள் என்பதே; கறுப்போ, சிவப்போ, மாநிறமோ, வெளுப்போ, குள்ளமோ, உயரமோ, நடுத்தரமோ, உயர்தரமோ, சிறுவயதோ, பெருவயதோ, சிறுமியோ, முதியவளோ என்னவானால் என்ன? எல்லோருக்கும் பொதுவான அம்சம் அவர்கள் "பெண்' என்பதே.
அது மட்டுமே போதுமானதாக இருக்கிறது ஆண்களுக்கு, ஆண்களின் வக்கிரத்துக்கு, ஆண்களின் ஆதிக்கத்துக்கு, ஆண்களின் "சனாதனத்துக்கு'.
தன் காதலுக்கு, தன் மோகத்துக்கு, தன் இச்சைக்கு, தன் காமத்துக்கு, தன் வேட்கைக்கு, தன் வேட்டைக்கு அடிபணிய வேண்டியதே பெண்ணின் கடமை என்பதே ஆண்களின் நினைப்பு. இத்தனை நூற்றாண்டாகப் பெண்களின் காதுகளில் அமில வார்த்தையை ஊற்றினார்கள். பெண்களின் இதயத்தில் அமிலக் கத்திகளைச் சொருகினார்கள். பெண்களின் கனவுகளில் அமிலக்குத்தீட்டியை நுழைத்தார்கள். இப்போது பெண்கள்மீது அமிலத்தையே ஊற்றுகிறார்கள்.
என்ன காரணம்? அவனின் இச்சையை, அவனின் காதல் என்னும் வக்கிரத்தை, ஒருதலை மோகத்தை அவள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள் என்பதால். இன்றைய பெண்களின் கனவுகள் ஆண்களைத் தாண்டி வளர்ந்துவிட்டது. கல்யாணத்தைத் தாண்டி வளர்ந்துவிட்டது. குடும்பத்தைத் தாண்டி வளர்ந்துவிட்டது.
தனக்கெனக் கல்வி, தனக்கென வேலை, தனக்கெனச் சம்பாத்தியம், தனக்கெனச் சுதந்திரம் என்று தெளிவாக இருக்கிறார்கள் பெண்கள்.
படித்தும் படிக்காமலும், திருமணம் செய்து அஞ்சுக்கும் பத்துக்கும் புருஷன் கையை எதிர்பார்க்கும் பிச்சைப்பிழைப்பு பெண்களுக்குப் பிடிக்கவில்லை.
சின்ன வயதிலேயே தாலி வாங்கிக்கொண்டு, வதவதவென்று குழந்தை குட்டியோடு, சமையலறைக்கும் கட்டிலறைக்கும் நடையாய் நடந்து செத்துப்போக இன்றைய பெண்கள் தயாராக இல்லை.
எல்லோர் கண்ணிலும் ஒரு கனவு குடியிருக்கிறது. எல்லோர் கண்ணிலும் ஒரு தாகம் குடியிருக்கிறது. எல்லோர் நெஞ்சிலும் ஒரு சுதந்திரம் குடியிருக்கிறது. இத்தனையும் நிறைவேற்ற ஒரு "ராஜகுமாரன்' வருவான். ஒரு "புருஷன்' வருவான். அவன் - தனது கனவெல்லாம் நிறைவேற்றுவான். நனவாக்குவான்.
இப்படியாக பாட்டி, கொள்ளுப்பாட்டி, எள்ளுப்பாட்டிபோல நம்பி நம்பியே கிள்ளுக்கீரையாக இன்றைய பெண்கள் தயாராக இல்லை.
அவர்களே போருக்குத் தயாராகிவிட்டார்கள். அவர்களே போர்வீரனாகத் தயாராகிவிட்டார்கள். அவர்களே களம் இறங்கத் தயாராகிவிட்டார்கள். அவர்களே விழுப்புண் ஏற்கவும் தயாராகிவிட்டார்கள்.
அதனால், தாமதித்த திருமணம் வழக்கமாகி வருகிறது. தாமதித்த காதல் வழக்கமாகி வருகிறது. தாமதித்த குழந்தைப்பேறும் வழக்கமாகி வருகிறது.
படிப்பு முக்கியம், வேலை முக்கியம், சம்பளம் முக்கியம், சுதந்திரம் முக்கியம், தெளிவு முக்கியம், நிம்மதி முக்கியம் என்பதே இன்றைய பெண்களின் வாழ்க்கை முறை. தெளிவும் நிம்மதியும் கணவனால்தான் வரும், திருமணத்தால்தான் வரும் என்கிற தவறான கணிப்பும் பெண்களிடம் இல்லை. தானே தனது விடியலைத் தேடிக் கொள்கிறார்கள்.
அப்பா, அண்ணன், தம்பி, மாமா தவிர தான் சந்திக்கும் முதல் ஆண் மகனையே புருஷனாக நினைத்து ஏங்கி, உருகிப் பசலையில் கரைந்த பசலைப் பெண்கள் இன்று இல்லை. திருமணம் ஒரு சிகரம் என நினைத்துப் புதைமணலில் சிக்கிக்கொண்ட கவலைப்பெண்கள் இன்று இல்லை.
தனக்கெனச் சிந்தனை இல்லாமல், புருஷனின் "ம்' என்ற ஒற்றைச் சொல்லுக்காகத் தவமிருந்த மண்ணாந்தைப் பெண்கள் இன்று இல்லை. சவலைப் பெண்கள் இன்று இல்லை. அபலைப் பெண்களும் இன்று இல்லை.
தாலிக் கயிறே தூக்குக் கயிறானது நேற்று. தன்னைக் காதலிப்பவனுக்குக் கழுத்தை நீட்டியது நேற்று. அவன் காதலித்தால் மட்டும் போதாது. தானும் காதலிக்க வேண்டும். தானும் நேசத்தை வெளிப்படுத்த வேண்டும். தனக்கும் நேசத்துக்கான உரிமை உண்டு என்று நினைக்கிறாள் இன்றைய பெண். தான் அவனைக் காதலிக்காவிட்டால் - விலகிச் செல்லும் உரிமை உண்டு என உறுதியாக எண்ணுகிறாள். தான் அவனைக் காதலிக்காவிட்டால் - தெளிவாக விலகிச் செல்கிறாள் அவள்.
அது பொறுக்கவில்லை நம் சகோதரர்களுக்கு. அடிமையாக இருந்தவள் அரசியாவதா என்கிற பொருமல். பிணவாழ்க்கை வாழ்ந்தவள் - உயிர்ப்போடு உலவுவதா என்கிற ஆங்காரம். பிறப்புக்கும், இருப்புக்கும் தன்னிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தியவள் - இன்று தானாகவே அமுதசுரபி ஏந்துவதா என்கிற பொச்சரிப்பு.
ஒருதலையாகக் காதலிக்கும் தன் காதலை அவள் ஏற்றுக்கொள்ளவில்லையெனில் - தன் ஆண்மைக்கு இழுக்கு, தன் ஆண்மைக்குத் தலைகுனிவு என்கிற அவமானம். எல்லாம் சேர்ந்து அவனை அமிலம் வீச வைக்கிறது. அவளைக் கருக வைக்கிறது. அவனை மதியிழக்க வைக்கிறது. அவனை மிருகமாக்க வைக்கிறது. அவளைச் சாக வைக்கிறது. அவனுக்குத் தெரிவதேயில்லை. பேரன்பும் பெருங்காதலும் யாரையும் காயப்படுத்தாது. யாரையும் நோகடிக்காது. யாரையும் சாகடிக்காது.
இதுதெரியாமல், இச்சைகொண்டு அலைவது காதலாகுமா? காமம்கொண்டு அலைவது நேசமாகுமா? வெறுப்புகொண்டு அலைவது தோழமையாகுமா?
நேற்று - ஆண்களும் அமிலச்சிந்தனையுமாக இருந்தார்கள். ஆண்களும் அமிலப் பார்வையுமாக இருந்தார்கள். ஆண்களும் அமிலச் செயலுமாக இருந்தார்கள். ஆண்களும் அமில வக்ரமுமாக இருந்தார்கள்.
இன்று ஆண்களும் அமிலமுமாகவே இருக்கிறார்கள். இன்னும் எத்தனை நாளுக்கு அமிலத்தோடு அலைவார்கள்? இன்னும் எத்தனை பெண்களுக்கு அமில அபிஷேகம் செய்வார்கள்? இன்னும் எத்தனைப் பெண்களை உருக்குலைப்பார்கள்?
ஆண்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள். பெண்கள் வாழட்டும் - அடிமையாக இல்லை, அரசியாக.
பெண்கள் வாழட்டும் - இரவல் சுவாசத்தோடு இல்ல, சொந்த சுவாசத்தோடு.
பெண்கள் வாழட்டும் - மண்ணாந்தையாக இல்லை. ரோஷத்தோடு.
பெண்கள் வாழட்டும் - ஆண்களின் இரவாக இல்லை. பகல் வெளிச்சமாக.
பெண்கள் வாழட்டும் - இரவல் ஒளிநிலாவாக இல்லை. சுய சூரியனாக.
ஆணின் சந்தோஷத்துக்காக, கௌரவத்துக்காக, பெருமைக்காக, உற்சாகத்துக்காக, மோகத்துக்காக, காமத்துக்காக, மையலுக்காக, சமையலுக்காக, உறக்கத்துக்காக, கிறக்கத்துக்காக, பெண்கள் வாழ்ந்தது போதும். பெண்கள் தங்களை உணரும் காலம் இது. பெண்கள் தாங்களே உயரும் காலம் இது. பெண்கள் தாங்களே சிகரம் எட்டும் காலம் இது. பெண்கள் தாங்களே சிகரமாகும் காலம் இது.
ஆண்களே - கொஞ்சம் எட்டி நில்லுங்கள்; அமிலம் வீசுவதாக இருந்தால் - உங்களைப் பெற்ற உங்கள் தாயின் வயிற்றில்தான் வீசவேண்டும்.
கட்டுரையாளர்: கவிஞர், கோவை தொலைக்காட்சி நிலையத் தலைவர்.