வாகனம் வேண்டாமே
நகர்ப்புறங்களில் தினசரி மாலை வேளையில் பணிக்குச் செல்லாத ஆண்களும், பெண்களும் வயோதிகர்களும் நவநாகரிக உடைகளுடனும் காலணி அணிந்தும் நடைப்பயிற்சி சென்று கொண்டிருக்கின்றனர்.
நகர்ப்புறங்களில் தினசரி மாலை வேளையில் பணிக்குச் செல்லாத ஆண்களும், பெண்களும் வயோதிகர்களும் நவநாகரிக உடைகளுடனும் காலணி அணிந்தும் நடைப்பயிற்சி சென்று கொண்டிருக்கின்றனர்.
மிகவும் காலதாமதமாக படுக்கையிலிருந்து எழுவது, மாடியிலிருந்து கீழே காய்கறி வாங்க வரும்போது மின்தூக்கியைப் பயன்படுத்துவது, மிக அருகில் உள்ள பலசரக்கு கடைக்கு செல்லக்கூட இரு சக்கர வண்டியை பயன்படுத்துவது, எரிவாயு உருளையை இடம் மாற்றி வைக்கக் கூட யாராவது ஆள் வருவார்களா என எதிர்பார்ப்பது இவ்வாறு உடலுழைப்பு என்றால் என்னவென்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஓடியாடி வேலை செய்தாலே தனியாக நடைப்பயிற்சி தேவையில்லை, நமக்கு தனியாக ஒரு மருத்துவரோ, குடும்ப மருத்துவரோ வீட்டில் ஒரு மினி மருந்துக் கடையோ தேவையில்லை என்பதை உணர மறுக்கின்றனர்.
இந்தியாவில் இராஜபுத்திரர்களும் மராட்டியர்களும் கடினமாக உழைத்து உடல்நலனை பேணியதால்தான் அவர்களை வீரத்திற்கு சொந்தக்காரர்களாக இன்றும் வரலாறு பேசுகின்றது. கிரேக்கத்தில் உள்ள ஸ்பார்டியன்கள் என்ற இனத்தவர்கள் கடின உழைப்பால் கட்டுமஸ்தான உடலால் வரலாற்றில் புகழ்பெற்றவர்கள். "எழில்மிகு ஏதென்ஸ் நகர மக்களே' என அழைத்த சாக்ரடீஸ் இறக்கும் தருவாயில் மதுக் கிண்ணத்தை ஏந்தியபடி உள்ள புகைப்படத்தை பார்த்தால் சாக்ரடீஸ் மற்றும் அவரது சீடர்கள் உடலுறுதி பேணுபவர்களாகவே காட்சி தருகின்றனர்.
வீரத் துறவி விவேகானந்தர்கூட "பகவத் கீதையை படிப்பதை விட கால் பந்தாட்டம் ஆடுவதே முக்கியம்' என்கிறார்.
ஆனால் நம் நாட்டிலோ எல்லாமே தலைகீழாக நடக்கின்றது. இரண்டு ரூபாய் கறிவேப்பிலை வாங்க ஐந்து ரூபாய் பெட்ரோல் செலவழித்து அருகிலுள்ள கடைக்கு பையனை அனுப்புகின்றனர் இரு சக்கர வாகனத்தில். நடந்து செல்லலாம், அல்லது மிதிவண்டியில் செல்லலாம். நாம் நடக்க நடக்க நோய்களும் நம்மைவிட்டு நடக்கும் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். நாடு, நகரங்களில் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த இரு சக்கர வாகனங்கள் இன்று குக்கிராமங்கள் வரை ஆட்சி செய்கின்றது.
குடும்பத்திற்கு ஒன்று இருந்த நிலை மாறி இன்று குடும்பத்தில் ஆளுக்கு ஒரு இரு சக்கர வாகனம் என்ற நிலை வந்துவிட்டது.
இருசக்கர வாகனங்களில் இளைஞர்களும் மாணவர்களும் செல்லும் வேகம் இருக்கின்றதே சொல்லிட முடியாது. இதில் 108 வாகனத்தையே முந்திச் செல்லும் முற்போக்குவாதிகளும் உண்டு.
பகட்டை வெளிப்படுத்தவே பலர் வாகனங்களை வைத்திருக்கின்றனர். நிறுத்துவதற்கான இடமில்லாததால் பல வாகனங்கள் சாலையில்தான் நின்று கொண்டு இருக்கின்றது.
அருகில் அலுவலகம் உள்ளவர்கள் மிதிவண்டியில் சென்று வந்தால் உடல் நலனும் நன்றாக இருக்கும். தொப்பையும் வராது.
மிதிவண்டி மிதித்தால் உடலில் உள்ள பல தசை நார்கள் மிக ஆரோக்கியமாக செயல்படும் என உடலியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆசிரியர்களும் மற்றும் பெற்றோர்களும் மாணவர்களுக்கு உடலுழைப்பின் அவசியத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். முன்மாதிரியாக நடந்து கொள்ளவும் வேண்டும். இரு சக்கரப் பயன்பாட்டை குறைக்கும்பொழுது வளிமண்டல மாசடைதல் குறைகின்றது. வாகனப் பயன்பாட்டை குறைத்தலால் நாம், பூமிக்கே நல்லது செய்கின்றோம் என்ற எண்ணத்தை இளம் பிராயத்தினருக்கு உணர்த்த வேண்டும்.
அரசும் போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்தி, நல்ல தரமான பேருந்துகளை இயக்கினால், பேருந்து இருக்க எதற்கு இருசக்கர வாகனம் என்ற எண்ணம் மக்களிடம் ஏற்படும். அரசுக்கு வருவாயும் பெருகும்.
சில நிகழ்ச்சிகளுக்குச் சென்று பார்த்தால், வாகனங்கள் கடல்களாக காட்சி தரும். நம் வாகனத்தை தேடிக் கண்டுபிடித்து வெளியே எடுத்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.
இந்தியாவின் வளர்ச்சியைப் பாதிக்கும் முக்கியமான காரணி பெட்ரோலிய இறக்குமதியே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறெல்லாம் புரிந்து நாம் நடந்து கொண்டோமானால் வருங்கால இளைய தலைமுறையினர் வளமிக்கவர்களாக, உடல் உறுதி மிக்கவர்களாக இருப்பர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.