சிறப்புக் கட்டுரைகள்

முதியோரைப் பேணுதல் இளைஞர் கடனே..

"மற்ற குழந்தைகளை விட எனது குழந்தை எப்போதும் சிறந்தவனாக இருக்கவேண்டும். அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார்" என்ற மனநிலைதான் பெரும்பாலான பெற்றோர்களிடம் இருக்கிறது.. அதுமட்டுமில்லாமல் வயதானகாலத்தில் நம் குழந்தைகள் நம்மைக் கவனிப்பார்கள் என்ற நம்பிக்கையும்,

டாக்டர். ஆர். ராதிகா தேவி

"மற்ற குழந்தைகளை விட எனது குழந்தை எப்போதும் சிறந்தவனாக இருக்கவேண்டும். அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார்" என்ற மனநிலைதான் பெரும்பாலான பெற்றோர்களிடம் இருக்கிறது.. அதுமட்டுமில்லாமல் வயதானகாலத்தில் நம் குழந்தைகள் நம்மைக் கவனிப்பார்கள் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் கூட சில பெற்றோரிடம் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் குழந்தைகள் வளர்ந்தபின்னர் பெற்றோர்களின் தியாகத்தை மறந்துவிடுவதால் தான் இன்றைக்கு முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருகின்றன.

தனது குழந்தையின் நலனை மட்டுமே முன்னிறுத்தி இரவு பகலாக வேலைப்பார்த்து சம்பாதித்த தந்தையும் கண்துஞ்சாது கவனித்துக்கொண்ட தாயும், அவர்களின் வயதானகாலத்தில், ஒருசேர சேர்ந்து வாழமுடியாத நிலை தான் இன்றைக்கு இருக்கிறது. ஒரு மகன் வீட்டில் தாயும் இன்னொரு மகன் வீட்டில் தாயும் தஞ்சமடையவேண்டிய அவலத்தைக் காணமுடிகிறது. இதில் உடல்நலத்துடன் இருக்கும் தாய்க்கு மகன்கள் மத்தியில் ஏக "மதிப்பு" இது பாசத்தினால் அல்ல. தாய் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால், தங்கள் வீட்டு வேலையைச் செய்வார், சமையலைப் பார்த்துக்கொள்வார், குழந்தைகளைக் கவனித்துக் கொள்வார் என்பதற்காகத்தான். அதுவும் கணவனும் மனைவியும் வேலை பார்ப்பவர்கள் என்றால் உடல்நலமுள்ள தாய் சம்பளம் கொடுக்காத பணியாளாக மாற்றப்பட்டுவிடுவதைக் காணமுடிகிறது. அதுபோல குழந்தையை பள்ளியில் கொண்டு விட்டு கூட்டிவர, வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கித்தர ஏன தந்தையை பயன்படுத்திக் கொள்ளும் நிலையும் இன்றிருக்கிறது.

வயதான பெற்றோரால் எந்த பயனும் இல்லையென்றால் அவர்களின் புகலிடம் முதியோர் இல்லமாகிவிடுகிறது. அதிலும் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோரின் பிள்ளைகள் உயர்பதவிக்கு வந்து அவர்களுக்கு  திருமணமும் முடிந்துவிட்டால் தனது பெற்றோரை வீட்டில் வைத்திருக்க மகன் விருப்புவதில்லை. தனது "சமூகஅந்தஸ்து"க்கு அழுக்கான பெற்றோர் தன்னுடன் இருப்பது சரியாக இருக்காது என நினைப்பார்.

பல்லாயிரம் பணம் கட்டியேனும் முதியோர் இல்லத்துக்கு அனுப்பிவிடுவார். என் பிள்ளையை எப்படியெல்லாம் ஆசையாய், அன்பாய் வளர்த்தோம், இப்படி எங்களை கடைசிக் காலத்தில் வீட்டை விட்டு துரத்தி விட்டுவிட்டானே என்று நினைந்து உடைந்து போகும் பெற்றோர் இன்றைக்கு ஏராளம். இதற்கு அடுத்தகட்டமாக தாயை ஒரு முதியோர் இல்லத்திலும் தந்தை இன்னொரு முதியோர் இல்லத்திலும் பிரித்து அனுப்பும் "கடமை"யையும் சில குழந்தைகள் செவ்வனே செய்கிறார்கள்.

உலக அளவில் முதியோர்

வளர்ந்து வரும் அதிநவீன மருத்துவத்துவத்தால் உலக அளவில் முதியோரின் எண்ணிக்கை விறுவிறுவென அதிகரித்து வருகிறது  1900 களில் 4 சதவிகித முதியோர்கள் இருந்த அமெரிக்காவில் இன்று சுமார் 14 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. அதாவது மூன்று மில்லியன் எனும் அளவில் அப்போது இருந்த முதியவர்களின் எண்ணிக்கை இப்போது 36 மில்லியன் எனும் அளவை எட்டியிருக்கிறது. 2020 ம் ஆண்டு இது 17 விழுக்காடைத் தொட்டுவிடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. உலக அளவில் 2020ல் நூறு கோடி பேர் அறுபது வயதைத் தாண்டியவர்களாக இருப்பார்கள் என்கின்றன ஆய்வுகள்.இன்னும் பத்தாண்டுகளில் உலக அளவில் உள்ள முதியோர்களில் எழுபத்தைந்து சதவிகிதத்தினர் வளரும் நாடுகளில் இருப்பார்கள். அதுமட்டுமின்றி  80 வயதுக்கும் மேற்பட்டோர் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதையும் கணக்கெடுப்பு ஒன்று காட்டுகிறது. அதுபோல ஆண்களை விட பெண்கள் அதிக ஆண்டுகள் உயிர்வாழ்வதாக உலக அளவில் எடுக்கப்பட்ட ஆய்வுகள் சொல்கின்றன.

உலகிலேயே முதியோர்கள் அதிகமாய் இருக்கும் நாடு எனும் பெயரை சீனா தக்கவைத்திருக்கிறது. சீன மக்கள் தொகையில் 14 சதவிகிதம் பேர் முதியோர். சீனாவில் 16 கோடிக்கும் அதிகமான முதியோர்கள் இருக்கிறார்கள். ஆண்டு தோறும் மூன்று சதவிகித முதியோர்கள் அதிகரிப்பதாகவும் சீன தேசிய முதியோர் குழு தலைவர் ஹ¨ய் சொல்கிறார். இதே நிலை நீடித்தால் 2020ம் ஆண்டில் 26 கோடி முதியவர்கள் சீனாவில் இருப்பார்களாம். அதிகரித்து வரும் முதியோர்களால் சீனாவில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் முதியோர் உதவித் தொகை, மருத்துவக் காப்பீடு, மற்றும் சமூக பாதுகாப்பு அம்சங்கள் பாதிப்படைவதாக சீனா கவலை கொண்டுள்ளது. இதனால் சீனாவின் பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தில் முதியோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கு அந்நாடு முன்னுரிமை அளித்துள்ளது.

இந்தியாவில் முதியோர்

முதியோர்களின் எண்ணிக்கை இந்தியாவிலும் வேகமாக அதிகரித்து வருகிறது. இன்றைய இந்திய மக்கள் தொகையில் 8.2 சதவிகிதம் பேர் முதியோர்கள். உலக முதியோர்களில் பாதிபேர் சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளில் வசிக்கிறார்கள். 1996ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025-ம் ஆண்டில் முதியோர் இந்தியாவில் 167 சதவிகிதம் அதிகரித்திருப்பார்கள். இந்தியாவில் 2016ஆம் ஆண்டில், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் 12 கோடிப் பேர் இருப்பார்கள். இவர்களில் 51 விழுக்காட்டினர் பெண்களாவர். தமிழகத்தில் 1991இல் 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 44 லட்சம். இவர்களில் 60 விழுக்காட்டினர் போதிய உணவு, உடை, உறையுள் ஆகிய வசதிகளின்றி தவித்தனர், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்றது ஒரு புள்ளி விவரம். இது கவலைக்குரிய விஷயம்.

முதியோர் கொலையில் தமிழகம்

 வயதான, தனியாக இருக்கும் முதியவர்கள் கொலை செய்யப்படுவதில் நாட்டிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தேசிய குற்ற ஆவண அமைப்பின் புள்ளி விவரங்கள்படி 2012-ம் ஆண்டில் நாட்டில் 50 வயதுக்கு மேற்பட்ட 3 ஆயிரத்து 823 பேர் பல்வேறு காரணங்களுக்காக கொல்லப்பட்டுள்ளனர். இதில் உத்தரப் பிரதேசத்தில் 383 முதியவர்கள் கொல்லப்பட்டனர். தமிழகத்தில் 301 முதியவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 123 பேர் பெண்கள். சொத்தை எழுதி வைக்க மறுத்தல், தனிப்பட்ட விரோதம், நகை, பணத்துக்காக போன்ற காரணங்களால் முதியவர்கள் கொல்லப்படுகின்றனர்.  இதன் மூலம் முதியோருக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை உணரமுடிகிறது.

முதியோர் தற்கொலை

குழந்தைகளின் சித்ரவதை தாங்கமுடியாதபோது பெற்றோர் தற்கொலை முடிவைத் தேடிக் கொள்கின்றனர். அண்மைக்காலமாக தற்கொலை செய்து கொள்ளும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  என்கிறது ஹெல்ப் ஏஜ் இந்தியா என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம். முதியோரைத் துன்புறுத்துவதில் 39 சதவிகிதம் பங்கு மருமகள்களுக்கு.. 38 சதவிகிதம் துன்புறுத்தல்கள் மகன்களால். சில மாதங்களுக்குமுன் சென்னை சாலிகிராமத்தில், தன் தாயை கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்டிய மகளை காவல்துறை கைது செய்தது. இத்தனைக்கும், தன்னிடம் இருந்த 50 லட்ச ரூபாய் பணத்தைத் தனக்குப்பின் மகளே எடுத்துக் கொள்ளலாம் என்று எழுதி வைத்திருக்கிறார் அந்த தாய். தாய் இறக்கும்வரை காத்திருக்க மனமில்லை அந்த மகளுக்கு.

பெண் முதியோர்

தந்தை, சகோதரர், கணவர், மகன் என வாழ்நாள் முழுவதும் ஆண் உறவுகளையே சார்ந்து வாழ வேண்டிய நிர்பந்தம் நம் பெண்களில் பலருக்கு உண்டு. கணவன் இறந்துவிட்டால், பிள்ளைகளைச் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். மகன்களோ, இன்றைய அவசர யுகத்தில் பொருளாதாரத் தேவைகளுக்காக வெளியூர் அல்லது வெளிநாடு சென்றுவிடுகின்றனர். அதனால், பல தாய்மார்கள் ஆதரவற்றுப் போகின்றனர். வயோதிகக் காலத்தில் பெண்கள் சந்திக்கும் துயரங்கள். உடல் ஆரோக்கியம் தொடங்கி சமூகப் பாதுகாப்பு, பொருளாதாரத் தேவைகள் என எல்லாவற்றிலும் பிரச்சினைகள்தான். அனைத்து வகையிலும் பாதுகாப்பற்ற சூழலில் அவர்கள் வாழ்கின்றனர்.

கிராமப்புறப் பெண்கள் கடின உழைப்பாளிகள். வாழ்நாள் முழுவதும் பல கஷ்டங்களை எதிர்த்துப் போராடி பழக்கப்பட்டவர்கள் அதனால், நகரத்துப் பெண்களுடன் ஒப்பிடுகையில், கிராமத்துப் பெண்கள் வயதான காலத்தில்  சிக்கல்களை எளிதாக எதிர்கொள்கிறார்கள்.   மேலும், கிராமங்களில் வயதான பெண்களை சம்பந்தப்பட்ட உறவுகள் அலட்சியப்படுத்தினால், மற்றவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் அவர்கள் ஆளாக வேண்டியிருக்கும். அந்தப் பயம் கிராமங்களில் இருக்கிறது. ஆனால், நகரங்களில் இதுகுறித்தெல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை. அதனால், நகரங்களைச் சேர்ந்த வயதான பெண்களுக்கு சிரமம் அதிகம்.  முதியோர் இல்லத்தில் தாயை சேர்த்து விட்டு பணத்தை மாதம்-மாதம் யார் செலுத்துவது என்று சண்டைப் போடும் மகன்களும் உள்ளனர்.

மதுரைக்கு முதலிடம்

தில்லியில் செயல்படும் ஹெல்ப் ஏஜ் இந்தியா தொண்டு நிறுவனம் முதியவர்களுக்கு இழைக்கப்படும் தீங்குகள் குறித்து  "இந்தியாவில் முதியோர் துன்புறுத்தல்-2013' என்ற தலைப்பில் ஆய்வு நடத்தியது. "உலக முதியோர் துன்புறுத்தல் விழிப்புணர்வு நாளான" ஜூன் 15-ஆம் தேதி தனது ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. இந்திய முதியோர்களில் ஐந்தில் ஒருவர் அவர்களுடைய குடும்பத்தினரால் துன்புறுத்தப்படுகின்றனர் என்றது அந்த அறிக்கை. அத்தோடு, "தேசிய அளவில் முதியோரை துன்புறுத்துவதில் மதுரை முதலிடத்தில் உள்ளது. மதுரையில் 63.5 சதவீதம் முதியவர்கள் தங்களது குடும்பத்தினரால், உறவினர்களால் துன்புறுத்தப்படுகின்றனர். அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் முதியோர் துன்புறுத்தல் 60 சதவீதமாக உள்ளது. பெருநகரங்களை பொருத்தவரை முதியவர்களை துன்புறுத்துவதில் ஹைதராபாத் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து கொல்கத்தா, தில்லி நகரங்கள் உள்ளன. சென்னைக்கு நான்காவது இடம்" எனப் பட்டியலிட்டது.

என்ன வகையான சித்ரவதை

"பெற்றோரை முதியோர் இல்லங்களில் கொண்டு விடுவதையே சித்ரவதை என்று சொல்கிறோம்.. ஆனால் முதியோரை வீட்டில் வைத்திருக்கவும் பிடிக்காமல், முதியோர் இல்லத்தில் அனுப்பினால் தங்களைப் பற்றி வெளியே என்ன சொல்வார்களோ என நினைத்து அவர்களை கொல்வது சர்வசாதாரணமாக நடக்கிறது" என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள் சிலர். "சில கிராமப்பகுதிகளில் படுத்த படுக்கையாக கிடக்கும் பெற்றோரை பராமரிக்க அவர்களது பிள்ளைகள் விரும்புவதில்லை.  அவருக்கு தேதி குறித்துவிடுகிறார்கள்" என்பது அவர்கள் சொல்லும் அதிர்ச்சியூட்டும் செய்தி.

அதாவது, "கொலை செய்ய முடிவு செய்திருக்கும் முதியவருக்கு "தலைக்கோதல்" நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறார்கள். தலைக்கோதல் என்றால் நோய்வாய்பட்டிருக்கும் நபரின் தலையில் நல்லெண்ணெய்யை அரக்கத் தேய்த்து படுக்கவிடுவார்கள். சில மணி நேரங்களுக்குப் பின்னர் அவரை தூக்கி வைத்து குளிப்பாட்டுவார்கள். அதிலேயே அவருக்கு காய்ச்சல் வந்துவிடும். பின்னர் வலுக்கட்டாயமாக அவருக்கு வாந்தி வரும் வரை இளநீர் ஊட்டுவார்கள். இதனால் காய்ச்சல் உச்சகட்டத்தை அடைந்து ஜன்னி கண்டு இரண்டு நாட்களுக்குள் அந்த வயதானவர் இறந்துவிடுவார்" என்பது அவர்கள் சொல்லும் செய்தி.  

மேலும் நோய்வாய்ப்பட்டிருக்கும் முதியோருக்கு விவசாய பூச்சி மருந்துடன் இனிப்பைக் கலந்து "டானிக்" என வாயில் ஊற்றி கொல்லும்  வழக்கமும் இருக்கிறதாம். அதுபோல  தென்னைமரத்தில் வண்டுகளை ஒழிக்க வைக்கும் மாத்திரையை சத்துமாத்திரை என விழுங்க வைத்துக் கொல்லும் முறையும் நடைமுறையில் இருக்கிறது என்கிறார்கள் சிலர். அதற்கெல்லாம் மேலாக படுத்த படுக்கையாக இருப்பவரை ஊசி போட்டு ஒரு சில மணி நேரத்தில் கொன்றுவிடுவதும் நடக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் அவ்வாறு நடந்த சம்பவங்கள் குறித்து இதழ்களிலேயே செய்தி வந்திருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் வயதான தனது தந்தையையோ தாயையோ அவர் நோய்வாய்ப்பட்டதும். கன்னியாகுமரிக்கு கூட்டிச் சென்று அங்கு விட்டுவிட்டு வருவதையும் மதுரையில் சிலர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். வசதியானவர்கள் கூட இதைச் செய்கிறார்கள். பத்து நிமிடம் பள்ளியிலிருந்து குழந்தை தாமதாக வந்தால் பரிதவிக்கும் பெற்றோரை இன்று கண்காணாத இடத்தில் விட்டுவிட்டு வந்து நிம்மதியாக இருக்கிறார்கள் என்றால் இது கொடூரம் இல்லையா?

மதுரை மாவட்டத்தில் மாதத்துக்கு சுமார் 15 முதியோர் தற்கொலை செய்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.  நோயுற்று உணவு உட்கொள்ள இயலாத பெற்றோரை, பிள்ளைகளே அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு, திரும்பிப் பார்க்காமல் செல்லும் நிகழ்வுகளும் அதிமாகி வருகின்றன. பெற்றோருடன் இவர்கள் பேசுவதில்லை என்பதோடு பேரன், பேத்திகளையும் பேச அனுமதிப்பதில்லை. இதைத் தாங்க முடியாமல் மனம் புழுங்கிப் போகிறார்கள் வயதான பெற்றோர். இந்த உளவியல் ரீதியாக கொடுமைப்படுத்துதலை பல வீடுகளில் காணமுடியும். வயதாகி விட்டால் உடல் நலிந்து, தோல் சுருக்கம் விழுந்து, சாப்பிடுவது குறைந்து, நோயில் விழுந்து முதியோர் அவதிக்குள்ளாகிறார்கள். ஆனால் இதையெல்லாம் தாங்கிக்கொள்ளும் முதியவர்கள், வீட்டில் இருப்பவர்களின் அலட்சியத்தை, நிராகரிப்பைத் தாங்க முடியாமல் தவிக்கிறார்கள்.

இன்றைக்கு வீட்டு உரிமையாளர்களின் நிபந்தனைகளும் முதியோரை அவமானப்படுத்துவதாகவே உள்ளது. உதாரணத்துக்கு, வயதானவர்களை வீட்டில் வைத்திருந்தால் வீடு சுத்தமாக இருக்காது அதனால் வாடகைக்கு வீடு தரமாட்டோம் என்கிறார்கள். மேலும் வாடகைக்கு குடியிருப்பவர்களில் வயதானவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தால், சடலத்தை வீட்டு வாசலில் மட்டுமே வைக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கின்றனர்.  முதியோர் இல்லங்களில் கூட "நடக்கும் நிலையில் உள்ள முதியோர்களுக்கானது." "நடக்க இயலாதவர்களுக்கானது" என இரண்டு பிரிவுகள் வந்துவிட்டன. நடக்க இயலாதவர்களுக்கான இல்லத்தில் கட்டணம் அதிகம். சில முதியோர் இல்லங்களிலும் சாதியும் மதமும் கூட பார்க்கப்படுவது வேதனையானது.

வீடு, நிலம், நகை போன்ற மதிப்புமிக்க சொத்துக்கள் ஏதாவது இருந்தால், அந்தப் பெற்றோருக்கு நல்ல கவனிப்பு கிடைக்கிறது. அந்தச் சொத்துக்களை, தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டும் பிள்ளைகள் தான் அதிகம். தங்கள் பெயரில் இருந்தால்தான், வங்கியில் கடன் வாங்க முடியும் என்று கூறி சொத்தை எழுதி வாங்கிவிட்டு பிறகு அந்தத் தாயைக் கைவிட்ட மகன்களுக்கும் ஏராளம்.

நகரங்களில் நட்சத்திர ஓட்டல்களுக்கு இணையான வசதிகள் கொண்ட முதியோர் இல்லங்கள் திறக்கப்படுகின்றன. எல்லாம் இருந்தும் அன்பாக, ஆறுதலாக வார்த்தைகள் சொல்ல யாருமில்லை என்கிற ஏக்கம் அங்கிருக்கும் முதியவர்களுக்கு உண்டு. பெற்றோர் சம்பாதித்த சொத்துக்களை தங்கள் பெயரில் மாற்றி  எழுதி வாங்கிக் கொண்டு அவர்களுக்கு போதிய அளவு உணவு கூட கொடுக்காமல் இம்சிப்பதும்  நடக்கிறது. தரக்குறைவாக திட்டுவது, ஆசைப்பட்டு ஏதாவது கேட்டாலும் வாங்கித் தராமல் அலட்சியப்படுத்துவது என பல வகைகளிலும் முதியோர்கள் சித்ரவதைக்குள்ளாகிறார்கள்.

சட்டம்

"பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டம்- 2007" நம் நாட்டில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் தேவையான பராமரிப்பை உறுதி செய்கிறது.   பெற்றோரைப் புறக்கணித்தால், மூன்று மாதம் சிறைத் தண்டனை என அரசு சட்டம் சொல்கிறது. இந்தச் சட்டம் குறித்து முதியோர் பலருக்கும் விழிப்புணர்பு இல்லை. இது குறித்துத் தெரிந்திருந்தாலும், தங்கள் கஷ்டத்தை குடும்ப கௌரவம் கருதி அடுத்த நபரிடம்கூட சொல்லாமல் தவிர்க்கும் முதியோர் 80 விழுக்காடு உள்ளனர் என்கின்றது ஆய்வு.

இந்தச் சட்டப்படி, குழந்தைகள் பெற்றோர் மற்றும் மூத்தோர் நலனை பராமரிக்கவேண்டும். கைவிடப்பட்ட மூத்த குடிமக்களுக்கு சட்டப்படியான பாதுகாப்பு வழங்கவேண்டும். மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு இல்லங்கள் நிறுவவேண்டும். மூத்த குடிமக்களின் சொத்துக்கள் மற்றும் தேவையான உயிர் பாதுகாப்பு மருந்துகள் கிடைக்க செய்தல் வேண்டும். சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு அவர்களை பாதுகாக்கத் தவறினால், அவ்வாறு எழுதி வாங்கியது சட்டப்படி செல்லாது.  சட்டம் ஒருபுறம் இருந்தாலும் முதியவர்களைப் பாதுகாப்பது குடும்ப நலனுக்கு எவ்வளவு அவசியம் என்பதை இளைய சமுதாயம் சிந்திக்க வேண்டும்.

. உடல்ரீதியான பாதிப்பு

முதுமை என்றவுடனேயே உடல் நோய் குறித்தான அச்சமே பற்றிக்கொள்கிறது . முதுமை ஒரு நோயல்ல. அது வாழ்வின் ஒரு பருவமே.  ஒருபக்கம் வயதின் முதிர்ச்சி, அனுபவம், அறிவு. மறு பக்கமோ தள்ளாமை, கொடிய நோய், வறுமை, தனிமை, மரணபயம் போன்றவற்றால் ஒருவித பதற்றத்தில் இருக்கிறார்கள் முதியோர்.

வயதின் காரணமாக உடல்ரீதியாகவும், உளரீதியாகவும், சமூகரீதியாகவும் இவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. வயது முதிர்வுறும் வேளையில் நண்பர்களை இழக்க நேரிடும், பழைய நினைவுகள் மறந்து போகும். வரப்போகும் நோய்கள் பற்றிய பயம் ஏற்படும். எந்த மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ளும் திறன்குறையும். கண்பார்வை குன்றும். தலை முடி நரைக்கும் . நிமிர்ந்த நடை குறையும், பற்கள் வலு இழக்கும், உடலில் எங்கும் வலி ஏற்படும்.

முதுமையில் வரும் முக்கிய நோய்களான உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, சர்க்கரை மற்றும் மூட்டு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நல்ல சிகிச்சை உண்டு. ஆனால் ஒருசில நோய்கள் முதியவர்களை நேரிடையாகவோ அல்லது மறை முகமாகவோ தாக்கும் அபாயம் உள்ளது. அதில் அறிவுத் திறன் வீழ்ச்சி (டிமென்ஷியா) எனும்  நோய்   முதியவர்களுக்கு வரலாம்.  இந் நோயின் முக்கிய அறிகுறி ஞாபக மறதி. நிகழ் காலத்தை அறவே மறந்து விடுவார்கள்.  முக்கியமாக 70 வயதைத் தாண்டிய பெண்களுக்கு இது அதிகமாக வருகிறது. நம் நாட்டில் 50 லட்சம் முதியவர்கள் இந் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதியவர்களைத் தாக்கும் மற்றொரு நோய் எலும்பு பலவீனமடைதல் (ஆஸ்டியோ பொரோஸிஸ்) வயதான காலத்தில் சில முதியவர்களுக்கு, முக்கியமாக பெண்களுக்கு எலும்பிலுள்ள சுண்ணாம்புத் சத்து மற்றும் சில ஊட்டச் சத்துகள் குறைவதால் எலும்புகள் வலிமை இழக்கின்றன. இயலாமையின் காரணமாக ‘நாம் வாழ்வதே வீண்’ என இவர்கள் எண்ணுகின்றனர். 

முதியோர் என்ன செய்யவேண்டும்

முதியோர்களும் அந்தப் பருவத்தை சூழலை ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ளவேண்டும். வீட்டிலோ, சமூகத்திலோ தனக்குப் பிடித்த ஏதேனும் ஒரு பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்வது மனதை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். புத்துணர்ச்சியான மனம் நோய்களின் முதல் எதிரி.

பல இடங்களைச் சென்று பார்ப்பதும், புதியவர்களுடன் நட்பு கொள்வதும், இயற்கை அழகை ரசிப்பதும் மனதிற்குத் தெம்பூட்டும். பிடித்தமான நூலை படிப்பதற்கும், படைப்பதற்கும் முதுமை ஒரு வரப்பிரசாதம் எனக் கொள்ளவேண்டும். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சிட்னி ஷெல்டன் எண்பது வயதைத் தாண்டியபின்னும் எழுதிக் கொண்டிருந்ததார். ஜான் கிளென் தன்னுடைய 77வது வயதில் தன்னுடைய இரண்டாவது விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாய் நடத்தினார்.

முதுமை இறைவனோடு ஒன்றித்திருப்பதற்கான காலம் என்று மதக் கலாச்சாரத்தில் திழைக்கும் இந்தியர்களின் கருத்தாக இருக்கிறது. உடலே இறைவனின் கொடை, எனவே உடலை தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும், தீய பழக்கங்கள் அண்டாமலும் காக்க வேண்டும் என்பது பல மதவாதிகளின் நம்பிக்கை. இந்த நம்பிக்கைகள் ஒருவகையில் மனதின் சோகங்களைத் துடைத்தெறிவதாகவும், எதிர்பார்ப்புகளுடன் கூடிய ஒரு வாழ்க்கையை முதியவர்களுக்கு நல்குவதாகவும் மனோதத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆன்மீக நாட்டமுடையவர்கள் ஆன்மீகத்தில் ஆழமாய் நுழைவது மனதுக்கு மிகவும் ஆறுதலும், உற்சாகமும் அளிக்கும்.

 பொழுதுபோக்குகளைத் தொடர்வதும், காலத்துக்கேற்ற புதிய பொழுதுபோக்குகளைக் கையாள்வதும் உற்சாகத்தை மீட்டெடுக்கும். மன மலர்ச்சிக்கு தொடர்ந்து பல பொழுதுபோக்குகளைக் கையாளுங்கள் என அறிவுறுத்துகின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.

அரசு என்ன செய்யலாம்?

"அனைத்து முதியோர்களுக்கும் உணவு, உடை, இருப்பிடம் மற்றும் சுகாதார வசதிகள் போன்றவை கிடைக்கப்பெற வேண்டும். வாழ்வதற்க்கான நல்ல சூழலை உருவாக்கிக் கொள்ள அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அவர்களை பாதிக்ககூடிய எந்த கொள்கை முடிவுகளிலும் அவர்களின் கருத்துக்களுக்கு அரசுகள் மதிப்பளிக்க வேண்டும். சமூகத்திற்கு சேவை புரியவும் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். சமூக மற்றும் சட்டப் பாதுகாப்புகள் அவர்களுக்கு அளிக்க வேண்டும். மனித உரிமை மற்றும் அடிப்படைச் சுதந்திரத்தை அவர்களும் அனுபவிக்க வேண்டும். இவை அனைத்து நாடுகளுக்கும் பொதுவான வரைமுறை ஆகும்" என 1991-ல் ஐ.நா. அறிவுறுத்தியது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை 65 வயது என்பது முதுமையின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது. அந்த வயதில் அமெரிக்கர்கள் பணியிலிருந்து விடுபட்டு முழுமையான அரசு காப்பீடு மற்றும் சலுகைகள் பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் ஆகிறார்கள். அந்த முறையை நம்நாட்டிலும் அமல்படுத்தலாம்.

பெற்றோருக்கு ஆகும் மருந்து செல்வு கூட பிள்ளைகளுக்கு பெரும் சுமையாக இருக்கிறது. எனவே அரசு முதியோர்களுக்கான மருந்து, மாத்திரைகள் சிலவற்றை இலவசமாகவும் சிலவற்றை 50 விழுக்காடு கட்டணத் சலுகையிலும் கிடைக்கச் செய்யலாம்.

முதியோர்களுக்கு ஆறுதலும் கவுன்சிலிங்கும் தேவை. முதுமை தரும் சில நோய்களை ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ப வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்கின்ற ஆலோசனையை அவர்களுக்கு புரிந்துகொள்ளும் வகையில் சொல்லக்கூடிய "ஜீரியாட்ரிக் கவுன்சிலர்'களும் தேவைப்படுகிறார்கள். இதற்கு அரசு ஏற்பாடு செய்யலாம்.

முதியோர் பாதுகாப்புச் சட்டப்படி மாவட்டம் தோறும் முதியோர் நலன் பேணும் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு கலெக்டர் தலைவர். முதியோர் பாதுகாப்புச் சட்டத்தைக் தீவிரமாக அமலாக்க சமூகநலத்துறையில் தனி அதிகாரி நியமிக்கலாம்.   குழந்தைகள் காப்பகங்களை முறைப்படுத்தியது போல முதியோர் இல்லங்களையும் முறைப்படுத்திட வேண்டும்.

முதியோர் தரும் மனுக்களை பெற ஒவ்வொரு ஸ்டேஷனிலும் சிறப்பு எஸ்.ஐ. நியமிக்கவேண்டும்

வரும் தலைமுறையினர் மத்தியில் முதியோர்களை மதித்தல் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தல் மிகஅவசியம். தற்போது அந்த முயற்சியை சில தன்னார்வ நிறுவனங்கள் முன்னெடுத்திருக்கின்றன. அரசு சார் நிறுவனங்களின் ஆதரவு இருக்கும்பட்சத்தில் இதனை இன்னும் வெற்றிகரமாக நடத்திடமுடியும். 

இதற்கும் மேலாக முதியோர் எதிர்பார்ப்பது.. மருத்துவ காப்பீடு அனைத்து முதியோர்களுக்கும் அளிக்க வேண்டும். ஆதரவற்றோருக்கு வழங்கும் மாத ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து வழங்க வேண்டும். முதியோர் பாதுகாப்பு சட்டத்தை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சரியாக செயல்பட அரசு உத்தரவிட வேண்டும். முதியோர் இல்லங்களை ஒவ்வொரு தாலுகா அளவில் ஏற்படுத்த வேண்டும். மூத்த குடிமக்களுக்கு அரசு, தனியார் பஸ்களில் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பவையாகும்.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் முதியோர் பெருமைகள் பற்றி ஆராயப்படுதல், வெகுசனத்தொடர்பு சாதனங்களில் அடிக்கடி இதுபற்றி பேசுதல் மிகவும் இன்றியமையாதது. முதியோர் இயல் (Geriatrics) ஒரு பாடமாக்கப்பட வேண்டியது அவசியம்.

தாயின் காலடியில் சொர்க்கம் உண்டு என்பது நபிகள் நாயகம் அவர்கள் சொன்ன பொன்மொழி. தாயின் காலில் விழுந்து வணங்க வேண்டுமென்பது இதன் பொருளாகாது. மாறாக, தாயை மதித்து, அரவணைத்து, அன்பு காட்டி, தாய்க்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே இதன் கருத்தாகும். முதியோர் நலன்காத்தல் தொடர்பான நடவடிக்கையில் இப்போதே ஈடுபடுதல் அவசியம். ஏனெனில் முதியோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் சீனியர் சிட்டிசன்களின் எண்ணிக்கை 18 கோடி வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது முதியோர்களின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும். தனை எதிர்கொள்ள இப்போதே தயாராகவேண்டும். அதற்கு இளைஞர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துதலே முக்கியமானதாக இருக்கமுடியும்.

டாக்டர். ஆர். ராதிகா தேவி,

உதவி பேராசிரியர்,

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT