FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

ஒரு நிமிடம் ப்ளீஸ்! வானில் வட்டமிடும் பருந்துகள் எங்கே என யோசித்தீர்களா?

நகரத்தை சுத்தப்படுத்தும் துப்புரவுப் பணியாளர்கள் இல்லையெனில் நகரம் எப்படி தூய்மை அடையும்?

Updated On : 22 ஜூன் 2019, 2:12 pm IST
பகிர்:


நகரத்தை சுத்தப்படுத்தும் துப்புரவுப் பணியாளர்கள் இல்லையெனில் நகரம் எப்படி தூய்மை அடையும்? இது பகுத்தறிவாளர்களாலோ அல்லது சிந்தனையாளர்களாலோ கேட்கப்படும் கேள்வி அல்ல மாறாக நாட்டில் வரும் ஒவ்வொரு குடிமகனும் கேட்க வேண்டிய கேள்வி! வீதிகள் அசுத்தமாக இருந்தால் நாம் வேறு வழியிலோ அல்லது நம்முடைய மூக்கைப் மூடிக் கொண்டோ செல்வோமே தவிர அவற்றை எவ்வாறு சுத்தப்படுத்தலாம் என்கிற யோசனையை நாம் தலை தூக்க விடுவதில்லை. அப்படி இருக்கும் நிலையில் நகரம் தூய்மையாகாமல் குப்பைக் கூளமாக மாறும்போது மற்றவர்களை கை காண்பித்துவிட்டு நகர்கிறோம்.
 
பத்திலிருந்து பன்னிரண்டு மில்லியன் டன் மாமிசக் கழிவுகளை சுத்தப்படுத்துவது இந்த துப்புரவுப் பணியாளர்களே. எவ்வளவு எடைக் கழிவுகள் என்று கூட பாராமல் அவ்வளவு பேரும் கூடமாக சேர்ந்து சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடுவார்கள். அந்த்ராக்ஸ் போன்ற கால்நடை நோய்களை கூட இவர்களால் ஒரே முறையில் சுத்தப்படுத்தி விட முடியும். ராமாயணத்தில் ‘ஜடாயு’, ‘கள்ளப் பருந்து’, ‘பாறு’ எனப் பல பெயர்களால் கூறப்படும் பருந்து என்கிற பறவையைப் பற்றித்தான் நாம் இப்பதிவில் காணவிருக்கிறோம். எனக்கு விவரம் அறிந்திருந்த நாட்களில் வானத்தில் எட்டு அல்ல ஒன்பது பருந்துகளை நான் என் வீட்டு மாடியில் கண்டு களிப்பது வழக்கம். மொட்டை மாடியின் இடத்தை என்று தொலைக்காட்சி நிரப்பியதோ அன்றே நாம் சுற்றுப்புறத்தையும், இயற்கையையும் மறக்கத் தொடங்கினோம் என்றே கூறலாம் .

பருந்துகள் எங்கே? இந்தக் கேள்விக்கு பலருக்கு விடை தெரியுமா என்பது கேள்விக்குறி. பருந்துகளில் மொத்தம் ஒன்பது இனங்கள் உள்ளன அவற்றில் நான்கு இனங்கள் தமிழ்நாட்டில் இருந்தன. அவை வெண்முதுகுப்பாறு, நீண்ட அலகுப்பாறு, செந்தலைத்பாறு மற்றும் மஞ்சள் திருடிப்பாறு ஆகியனவாகும். கடந்த பத்து ஆண்டுகளுக்குள் பருந்துகளின் எண்ணிக்கை 99 சதவீதம் குறைந்துள்ளது. 1980-களில் ஆயிரக்கணக்கான பருந்தகளை சென்னையில் கண்ட சாட்சிகள் பலர். அனால் 1990-ஆம் ஆண்டில் ஒன்று கூட தென்படவில்லை. மாமிசக் கழிவுகளின் நடுவே இப்பறவைகளின் பிணங்களும் கிடந்தன.
 
அரசாங்கமும், சமூக ஆர்வலர்களும் எவ்வளவோ முயன்றும், அதற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. பின்பு பாகிஸ்தானிலிருந்து சில அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் உதவியால் உண்மையான காரணத்தை கண்டறிந்தனர். பருந்துகளின் இறப்புக்கு காரணம் ‘டிக்லோபினாக்’ (Diclofenac) என்கிற கால்நடை மருந்தாகும். இவை குறிப்பாக மாட்டு வைத்தியதிற்காக பயன்படும் மருந்து. மாடுகளுக்கு காய்ச்சலோ, உடல் சோர்வோ அல்லது வலி நிவாரணியாகவோ ஊசி மூலம் பயன்படுத்துவார்கள்.

பொதுவாக மாமிசக் கழிவுகளை ஊருக்கு வெளியே உள்ள நிலங்களில் போடுவதும் அவற்றை பருந்துகள் உண்ணுவருவதும் வழக்கம். ஒரு மாடு அதன் சிகிச்சையின் போது உயிரிழந்தால் அந்த சடலத்தை நிலத்தில் போட்டுவிட்டு தோலை மட்டும் உரித்து எடுத்துச் செல்வார்கள். அந்த மாமிசத்தில் டிக்லோபினாகின் தாக்கம் இருக்கும். அந்த மருந்து இப்பறவைகளின் உடலில் ஒரு சதவிகிதம் சேர்ந்தால் கூட இறந்துவிடும். ஏனென்றால் அவைகளின் உடலுக்கு அந்த ரசாயனக் கலவையை ஏற்கும் திறனில்லை. அவ்வாறு உண்டாலுமே சிறுநீரகம் செயலிழந்து உடனே இறப்பு நிச்சயம். அதனின் உள்ளுருப்புக்களை யூரிக் அமிலம் குவிந்து செயலிழக்க வைக்கிறது. கீல்வாதமும், உடல் வறட்சியும் சேர்ந்து அவற்றை கொன்று விடுகிறது. மாமிசக் கழிவுகளை ஆய்வு செய்து பார்த்ததில் 10 சதவிகிதம் டிக்லோபினாக் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது.
 
இந்தியாவில் மில்லியன் கணக்கில் கால்நடைகள் டிக்லோபினாகினால் சிகிச்சை அளிக்கப்பட்டது. நம் நாட்டில் 200 மில்லியன் ரூபாய்க்கு விற்கப்பட்டது என்று சந்தைக் கணக்குகள் கூறுகிறது. இதை 110 மருந்தக நிறுவங்கள் தயாரித்தன, 25 நிறுவனங்கள் 45 ரசாயனச் சேர்க்கையாக தயாரித்து வந்தது.
 
பருந்துகள் இல்லாவிட்டால் என்ன? இந்த வேலையை நம் நாட்டில் துப்புரவுப் பணியாளர்களே செய்கிறார்களே! என்று கேட்கலாம். இப்பறவைகள் இல்லாததால் சுற்றுச்சூழல் ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளன. அனால் ஒன்றின் இடத்தை நிரப்பிட மற்றொன்று வருவது இயல்பே! இப்போது நாய்களும், எலிகளும் பருந்தின் இடத்தை நிரப்பியிருகின்றன. பருந்துகள் ஊருக்குள்ளோ அல்லது வீட்டுகுள்ளோ வருவதில்லை அனால் நான் மேற்கூறிய தெரு நாய்களும், எலிகளும் சாதாரணமாக மனிதர்களுடன் நடமாடுகின்றன. மிகச்சுலபமாக, ராபீஸ் மற்றும் ப்ளேகை பரப்புகின்றன. பருந்துகள் இயற்கையாகவே துப்புரவாளனாக படைக்கப்பட்டவை அனால் இவைகள் அப்படியல்ல, செய்தித்தாளில் 'ஆறுமாதக் குழந்தையை வெறி நாய் கடித்துத் தின்றது’ எனப் போடப்படும் ஒற்றை வரி தலைப்பின் பின்னே ஒளிந்திருக்கும் உண்மை இதுவே. ஊருக்கு வெளியே குவிக்கப்படும் மாமிசங்களை உண்ணுவதோடல்லாமல் ஊருக்குள் வந்து இத்துனை அட்டகாசத்தையும் செய்கிறது நாயும், எலியும்.

Advertisement

Advertisement

தற்போது டிக்லோபினாக்கை அரசாங்கம் தடை செய்துள்ளது, இதற்கு பதிலாக 'மேலோசிகேம்' என்கிற புதிய மருந்தை பல சோதனைகட்கு உட்படுத்தி பயன்படுத்துகிறார்கள். டிக்லோபினாக்கை பயன்படுத்தியதற்குக் காரணம் அது விலை குறைந்தது என்பதற்காகவும் சுலபமாக எல்லா மருந்துக் கடைகளிலும் கிடைக்கும் என்பதற்காகவும் மட்டுமே. அனால் மேலோசிகேம் டிக்லோபினாக்கை விட விலை உயர்ந்ததாக விற்கப்படுகிறது. இந்தியாவில் சில மாநிலங்களில் இன்னும் டிக்லோபினாக் விற்கப்படுகிறது என்பது வருந்தத்தக்கச் செய்தி.
 
உலகிலேயே எந்தப் பறவையும் இந்த அளவில் வெகு சீக்கிரத்தில் 99 சதவீதம் அழிந்திருக்கவில்லை. டோடோ (Dodo) என்கிற பறவையும் கூட இவ்வளவு சீக்கிரம் அழிவை நோக்கி பயணித்திருக்கவில்லை. கடந்த 2000-ஆம் ஆண்டில்‘சர்வதேச இயற்கை பாதுகாப்புச் சங்கம்’ பருந்தை 'அழிந்து வரும் உயிரினங்கள்' பட்டியலில் சேர்த்தது. குறிப்பாக வெண்முதுகுப்பாறு, நீண்டலகுப்பாறு மற்றும் மெல்லியலகுப்பாறு 99 சதவிகிதம் இந்திய, பாகிஸ்தான், நேபால் முதலிய நாடுகளில் குறைந்துள்ளது.
 
இப்படி ஒரு அபூர்வப் பறவையை காப்பாற்றும் யுத்தம் தொடங்கியுள்ளது. பருந்துகள் பாதுகாப்பு இனப்பெருக்க மையங்கள் சில இடங்களில் தொடங்கப்பட்டுள்ளன. பின்ஜோர் (ஹரியானா), பக்ஸர் (மேற்கு வங்காளம்), ராணி (அஸ்ஸாம்), மேலும் நான்கு மையங்கள் குஜராத்திலும், மத்ய பிரதேசத்திலும், ஒரிசாவிலும், ஆந்திரப்பிரதேசத்திலும் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த பத்து வருடத்தில் இந்த மருந்தினால் 85 மில்லியன் பருந்துகள் கொல்லபட்டிருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments