சென்னை புழலில் பிளஸ் 2 தேர்வு எழுதிய கைதிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதினால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்த விவரம்: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு வியாழக்கிழமை தொடங்கியது. சிறைக் கைதிகள் இந்த தேர்வு எழுதுவதற்கு புழல் மத்திய சிறையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்தத் தேர்வு எழுதுவதற்கு மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளில், 88 பேர் அனுமதி பெற்றிருந்தனர். இவர்கள் அனைவரும் தேர்வுக்காக, ஓரிரு நாள்களுக்கு முன்பே புழல் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் 88 கைதிகளும் புழல் தேர்வு மையத்தில் வியாழக்கிழமை தேர்வு எழுதத் தொடங்கினர்.
அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கிரேன்குளத்தைச் சேர்ந்த கைதி கருணாமூர்த்தி(47) காலை 11.15 மணிக்கு திடீரென நெஞ்சு வலியின் காரணமாக மயங்கி விழுந்தார்.
இதைப் பார்த்த சிறைத் துறை அதிகாரிகள், அவரை உடனே சிறைக்குள் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக, ராயப்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவத்தினால் சிறைப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் கருணாமூர்த்தியை தவிர்த்து மீதி 87 கைதிகளும் தொடர்ந்து தேர்வு எழுதினர்.