மதவாத அரசியல் கேரளாவில் எடுபடாது: காங்கிரஸ்
மதவாத அரசியல் கேரளாவில் எடுபடாது என காங்கிரஸ் தலைவர் தெரிவித்தது குறித்து...
மதவாத அரசியல் கேரளாவில் எடுபடாது என காங்கிரஸ் மூத்த தலைவரும் ஹரிப்பாடு தொகுதியின் வேட்பாளருமான ரமேஷ் சென்னிதலா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
கேரளா உள்பட தமிழகம், புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் சட்டப்பேரவைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிலும் குறிப்பாக, கேரளாவில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக நடத்த தேர்தல் ஆணையத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தையும் வாக்கு சேகரிப்பையும் தொடங்கியுள்ளன. இடதுசாரி ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி, தேசிய ஜனநாயக கூட்டணி போன்ற கூட்டணிக் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றன.
இதுகுறித்து பேசிய ரமேஷ் சென்னிதலா, “கேரள தேர்தலில் பாஜக ஒரு முக்கியமான போட்டியாளராக இல்லை. இங்கு மதவாத அரசியல் எடுபடாது. ஏனென்றால், இங்குள்ள மக்கள் படித்தவர்கள். பாஜக வெற்றி பெற போட்டியிடவில்லை. மாறாக அவர்கள் வாக்குகளைப் பிரிப்பார்கள்.
மேலும், நான் என்ன செய்ய வேண்டும் என்பதையும், யார் முதல்வர் என்பதையும் கட்சி முடிவு செய்யும். எங்களுக்குள் உள்கட்சி பூசல்கள் இல்லை. தேர்தல் களத்தில் அனைத்து காங்கிரஸ் நிர்வாகிகளும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, காங்கிரஸ் எம்.பியும், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடந்த மார்ச் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் கேரளாவில் இரண்டு நாள்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.