ஹிஜாப்பை அகற்றச் சொன்ன பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!
வாக்காளர்களுக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் முஸ்லிம் பெண் வாக்காளர்களின் ஹிஜாப்பை அகற்றச் சொல்லி அடையாள அட்டையை சரிபார்த்த பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளை பாஜக வேட்பாளர் மாதவி லதா பார்வையிட்டார்.
அப்போது, முஸ்லிம் பெண்களின் ஹிஜாப்பை அகற்றச் சொல்லி வாக்காளர் அடையாள அட்டையை மாதவி லதா ஒப்பிட்டு சரிபார்த்த காட்சிகள் இணையத்தில் வைரலாகின.
Advertisement
மேலும், தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம், வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், வாக்காளர்களை சுதந்திரமாக வாக்களிக்க விடாமலும், தேர்தல் நடத்தும் அரசு அலுவலர்களை மிரட்டும் நோக்கில் பேசுவதாகவும் மாதவி லதாவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், மாதவி லதா மீது வாக்காளர்களுக்கு இடையூறு செய்தல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் குறுக்கீடல், தவறான செய்தியை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹைதராபாத் மாவட்ட ஆட்சியர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் தொகுதியில் ஏஐஎம்ஐஎம் வேட்பாளர் அசாதுதீன் ஓவைசி, காங்கிரஸ் வேட்பாளர் முகமது வலியுல்லா சமீர், பிஆர்எஸ் வேட்பாளர் கடம் ஸ்ரீநிவாஸ் யாதவ் ஆகியோரை எதிர்த்து மாதவி போட்டியிடுகிறார்.