நீட் தேர்வில் விலக்கு; 5 லட்சம் பேருக்கு அரசு வேலை! பாமகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு!!
பாட்டளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் அன்புமணி இன்று (ஏப்.1) வெளியிட்டார்.
பாமகவின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் அன்புமணி இன்று (ஏப்.1) வெளியிட்டார். அதில், 5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் இருக்கும் திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் தேர்தல் வேலைகளைத் தீவிரப்படுத்தியிருக்கின்றன. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டளி மக்கள் கட்சி தருமபுரி உள்பட 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்த நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பாட்டளி மக்கள் கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அங்கு பாமகவின் தேர்தல் வாக்குறுதிகளை அவர் வெளியிட்டார்.
அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆளும் கட்சியான திமுக, எங்கள் வாக்குறுதியை காப்பியடிக்கின்றனர். அவர்கள் (திமுக) 505 வாக்குறுதிகள் கொடுத்து அதில் வெறும் 66 மட்டுமே நிறைவேற்றியிருக்கிறது. திமுகவின் தேர்தல் அறிக்கை கதாநாயகனும் கிடையாது, கதாநாயகியும் கிடையாது. அது குரூப் டான்ஸர் போன்றது”என்றார்.
பாமகவின் தேர்தல் வாக்குறுதிகள்
• 5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்
• 2026 - 2027 இரண்டு ஆண்டுகளில் மட்டும் 2.5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
• கிராம நிர்வாக அலுவலர் உள்பட குரூப்-4 பணிகளுக்கு 35 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள்
• குரூப்-2 பணிகளுக்கு 10,000 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.
• வகுப்புக்கு ஒரு ஆசிரியர் வீதம் நிரப்பவும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அதில், முதற்கட்டமாக 40,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
• காவல் துறை, தீயணைப்புத்துறையில் 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு.
• போக்குவரத்துத்துறையில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு.
• மின்சாரத்துறையில் 16,000 பேருக்கு வேலை வாய்ப்பு.
• மருத்துவத்துறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 7000 பேருக்கு வேலை வாய்ப்பு.
• நீட் நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் விலக்கு பெறப்படும்.