முகப்பு
தமிழ்நாடு

திமுகவின் தோல்வி கோவையில் ஆரம்பித்து சேப்பாக்கம் வரை தொடரும்! அண்ணாமலை

கோவையில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசியது பற்றி...

Updated On : 8 ஏப்ரல் 2026, 3:39 pm IST
தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை - X
பகிர்:

திமுகவின் தோல்வி கோவையில் ஆரம்பித்து சேப்பாக்கம் வரை தொடரும் என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

தில்லியில் இருந்து கோவை திரும்பிய அண்ணாமலை, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அவர் பேசியதாவது:

Advertisement

Advertisement

”கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட கரூரில் இருந்து 18 சுயேச்சை வேட்பாளர்களை செந்தில் பாலாஜி களமிறக்கியுள்ளார். 18 பேருக்கும் ஒரே நோட்டரிதான் கையெழுத்திட்டுள்ளார். தொண்டாமுத்தூரில் கரூரைச் சேர்ந்த 3 பேர் நிற்கிறார்கள். இந்த முறை கோவை மண்டலத்தில்தான் திமுகவின் தோல்வி ஆரம்பிக்கப் போகிறது. சேப்பாக்கம் வரை திமுக தோல்வியடையும்.

எடப்பாடி தொகுதியில் திமுக வேட்பாளரின் வேட்புமனுவில் டம்பி வேட்பாளரான அவரது மனைவியும், டம்பி வேட்பாளர் வேட்புமனுவில் திமுக வேட்பாளரும் கையெழுத்திட்டிருந்தார்கள். அதனை பரிசீலனையின்போது நிராகரித்திருக்க வேண்டும். சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலினின் வேட்புமனுவில் முதலீடுகள் விடுபட்டிருந்தது.

திமுகவின் தோல்வி வேட்புமனு பரிசீலனையிலேயே தொடங்கிவிட்டது. அரசு அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார்கள். இதனை எதிர்த்து அனைவரும் நீதிமன்றம் செல்வார்கள். திமுகவினர் வெற்றி பெற்றாலும் அது செல்லாது.

கோவையில் கரூரில் இருந்து ஆட்களை இறக்கி வீடுவீடாகச் சென்று செந்தில் பாலாஜி பணத்தை பட்டுவாடா செய்து கொண்டிருக்கிறார். ஒருபடி மேலே சென்று சுயேச்சை வேட்பாளர்களைகூட கரூரில் இருந்து இறக்குமதி செய்துள்ளார்கள்.

அதிமுகவின் வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் ஒவ்வொரு தெருவாகச் சென்று அவரது பிரசாரத்தை கண்ணியமாக செய்து வருகிறார்.

முதல்வர் வேட்பாளர்கள் நாள்தோறும் மக்களை சந்தித்துப் பேச வேண்டும் என்பது வாக்காளரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 6 மாதத்துக்கு முன்பு களத்துக்கு வராமல் இருந்தால் சரி, வருகின்ற 21 ஆம் தேதி மாலை பிரசாரம் முடியப் போகிறது, ஆனால், இன்னும் சிலர் அறிக்கை, ட்விட்டரில்தான் இருக்கிறார்கள்.

தற்போது களத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியும் போட்டியிடுகிறது. சீமானும் கடும் வெய்யிலில் மக்களிடம் பிரசாரம் மேற்கொள்கிறார். அனைவரின் கருத்துகளையும் கேட்டு மக்கள் முடிவெடுப்பார்கள். ஆனால், கருத்துகளே தெரிவிக்காமல் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்றே களத்துக்கு வரவில்லை என்றால், தேர்தலுக்குப் பிறகு எப்படி வருவார்கள்?” என்றார்.

summary

DMK's defeat will begin in Coimbatore and continue all the way to Chepauk! — Annamalai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.