தமிழ்நாட்டில் முதல்முறை வாக்காளர்கள் 34% உயர்வு! 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின்!!
கடந்த மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 34 சதவிகிதம் உயர்ந்துள்ளதைப் பற்றி...
கடந்த மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 34 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 4 மாநில பேரவைகளுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் நாளை (ஏப். 9) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப். 23-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக ஏப். 23, 29-இல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மொத்தமுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை தொடர்பான தரவுகள் வெளியாகியுள்ளன.
Advertisement
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்துக்குப் பின்னர், 5.67 கோடி வாக்காளர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பின்னர், நீக்கப்பட்ட வாக்காளர்களில் இருந்து மீண்டும் பதிவு செய்த 6.36 லட்சம் பேருடன் சேர்த்து 5.73 கோடி பேர் கொண்ட இறுதி வாக்காளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 18 முதல் 19 வரையிலான முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை கடந்த மக்களவைத் தேர்தலைவிட 33.6 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அதிகாரபூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 10.9 லட்சமாக இருந்த முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் 14.9 லட்சமாக உயர்ந்துள்ளது.
எஸ்ஐஆர் நடவடிக்கையால், வாக்காளர்களின் எண்ணிக்கை 5.73 கோடியாக குறைந்துள்ள போதிலும், முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1.8 சதவிகிதத்திலிருந்து 2.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
மொத்தமுள்ள 5,73,43,291 வாக்காளர்களில், 2,93,04,905 பெண்களும், 2,80,30,658 ஆண்களும், 7,728 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர். ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 12.74 லட்சம் பேர் அதிகமாகவுள்ளனர்.