அமித் ஷாவைப் பார்த்து சாணக்கியரே வியந்துபோவார்! பிரியங்கா பேச்சால் அவையில் சிரிப்பலை
பிரியங்காவைப் பார்த்து ராகுல் காந்தி பேச கற்றுக்கொள்ள வேண்டும்: மக்களவையில் அமித் ஷா
புது தில்லி : அமித் ஷாவைப் பார்த்து சாணக்கியரே வியந்துபோவார் என்று பேசிய பிரியங்கா பேச்சால் மக்களவையில் சிரிப்பலை எழுந்தது. பிரியங்காவைப் பாராட்டி, நாடாளுமன்றத்தில் எப்படிப் பேச வேண்டும் என்பதை தமது சகோதரி பிரியங்கா காந்தியைப் பார்த்து ராகுல் காந்தி கற்றுக்கொள்ளுமாறு மக்களவையில் அமித் ஷா தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
மக்களவை, சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை விரைவாக அமல்படுத்துவதுடன், அதற்கு ஏதுவாக மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து அதிகபட்சமாக 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா-2026, தொகுதி மறுசீரமைப்பு மசோதா-2026 (தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் அமைக்க வழிவகுக்கும் மசோதா), சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசங்களில் இந்தச் சட்டத் திருத்தங்களை நிறைவேற்ற வகை செய்யும் யூனியன் பிரதேசங்கள் சட்டத் திருத்த மசோதா-2026 ஆகிய மூன்று மசோதாக்கள் மீதான விவாதம் நாடாளுமன்ற அவைகளில் வெள்ளிக்கிழமை(ஏப். 17) நடைபெற்றது.
இன்று (ஏப். 17) மக்களவையில் மேற்குறிப்பிட்ட 3 மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற்றபோது பேசிய அவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்ததுடன், பிரதமர் மோடியை ஒரு மாயாஜாலக்காரர் என்று பேசியது பாஜகவினர் மத்தியில் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.
Advertisement
இதனிடையே, மக்களவை விவாதத்தில் காங்கிரஸ் எம். பி. பிரியங்கா காந்தி பேசும்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவைப் பார்த்து, “ஒட்டுமொத்த திட்டத்தையும் அவர் (அமித் ஷா) தயாரித்துவிட்டு, இப்போது சிரித்துக் கொண்டிருகிறார். சாணக்கியர் மட்டும் இப்போது உயிருடன் இருந்திருந்தால், உங்களுடைய அரசியல் சாணக்கியத்தனத்தைக் கண்டு அவரும்கூட வியந்திருப்பார். அவர் (அமித் ஷா) என் கருத்துடன் ஒத்துப்போகிறார் என்றே தெரிகிறது’ என்றார்.
சாணக்கியரைக் குறிப்பிட்டுப் பிரியங்கா காந்தி பேசியதற்கு அமித் ஷா பதில் ஏதும் பேசாமல் புன்னகை பூத்த முகத்துடன் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்களவை விவாதத்தின் இறுதியில் பதிலுரை ஆற்றிய அமித் ஷா, மக்களவைத் தொகுதிகளில் மக்கள்தொகை வேறுபாடு அதிகமாக உள்ளதால் தொகுதி மறுவரையறை மிகவும் முக்கியம் என்றுரைத்து விளக்கமளித்தார். அப்போது அவர், நாடாளுமன்றத்தில் எப்படிப் பேச வேண்டும் என்பதை தமது சகோதரி பிரியங்கா காந்தியைப் பார்த்து ராகுல் காந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.