இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
புதிய தலைமைச் செயலர் சாய் குமார் பற்றி...
தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு தலைமைச் செயலாளாக நியமிக்கப்பட்டுள்ள சாய்குமார், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முதன்மை தனிச் செயலராக இருந்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், சமீபத்தில் தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமனை மாற்றி, புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்தது.
தற்போது தலைமைச் செயலர் முருகானந்தம் மற்றும் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.
Advertisement
Advertisement
புதிய தலைமைச் செயலராக சாய் குமார் மற்றும் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு டிஜிபியாக சந்தீப் மித்தல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது 2018 முதல் 2022 வரை அவரின் முதன்மை தனிச் செயலாளராக சாய் குமார் பணியாற்றியுள்ளார்.
தற்போது வருவாய் நிர்வாக ஆணையராகவும் கூடுதல் தலைமைச் செயலாளராகவும் சாய் குமார் பணியாற்றி வருகிறார். கூடுதலாக தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பொறுப்பும் வகித்து வருகிறார்.
ஆந்திரத்தைச் சேர்ந்த சாய் குமார், 1990 பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். தருமபுரி, விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும், பொதுப் பணித்துறை முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.