கடமை தவறிவிட்டார் ஓ.பி.எஸ்.! ஆதரவாளர் ஆதங்கம்
கேப்டனாக இருந்து தொண்டர்களை கரைசேர்க்க வேண்டிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடமை தவறிவிட்டார் என அவரது ஆதரவாளரும், உசிலம்பட்டி தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஐயப்பன் தெரிவித்தார்.
கேப்டனாக இருந்து தொண்டர்களை கரைசேர்க்க வேண்டிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடமை தவறிவிட்டார் என அவரது ஆதரவாளரும், உசிலம்பட்டி தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஐயப்பன் தெரிவித்தார்.
ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து விலகி அதிமுக உரிமை மீட்புக் குழுவைத் தொடங்கியபோது அவருடன் தொடர்ந்து பயணித்தவர் ஐயப்பன். ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தபோது அவருடன் சேர்ந்து இணைந்தார். மேலும், இவர்கள் இருவரும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்தனர்.
ஓ. பன்னீர்செல்வத்துக்கு திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டபோதிலும், ஐயப்பனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இதனால், ஐயப்பன் பெரும் வருத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், மதுரை அருகே செக்கானூரணியில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த ஐயப்பன், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது:
ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து திமுகவில் இணைந்தபோது, உசிலம்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை எனக்குப் பெற்றுத் தர வேண்டும் என ஓ. பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தினேன். வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறினார். தற்போது ஏனோ கைவிட்டுவிட்டார். கேப்டனாக இருந்து தொண்டர்களை கரைசேர்க்க வேண்டிய ஓ. பன்னீர்செல்வம் அந்தக் கடமையைச் செய்யவில்லை. இருப்பினும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றார் ஐயப்பன்.
-எம்.சங்கர்