திமுகவின் கூட்டணிக் கட்சிகளை இணைத்துக்கொள்வது சரியா? - இயக்குநர் சேரன் கேள்வி!
தவெகவுடன் திமுகவின் கூட்டணிக் கட்சிகளை இணைத்துக்கொள்வது தொடர்பாக....
தவெக ஆட்சி அமைப்பதற்காக, திமுகவின் கூட்டணிக் கட்சிகளை இணைத்துக்கொள்வது சரியா? என்ற கேள்வியை இயக்குநர் சேரன் எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரை தவெக தலைவர் விஜய் புதன்கிழமை (மே 6) சந்தித்து உரிமை கோரினார்.
அப்போது, தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க 118 எம்எல்ஏக்களின் பட்டியலை வழங்க வேண்டும் என்று விஜய்யிடம் ஆளுநர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை (மே 7) காலை மீண்டும் தவெக தலைவர் விஜய் ஆளுநரைச் சந்த பிறகு, ஆளுநர் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 118 எம்எல்ஏக்களின் பட்டியலை தவெக தலைவர் விஜய் வழங்க வேண்டும் என்று ஆளுநர் தரப்பில் திட்டவட்டமாக மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்த நிலையில் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவளித்திருந்தது. மேலும், இடது சாரிகள் மற்றும் விசிகவின் ஆதரவை தவெக தலைவர் விஜய் நாடியுள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் சேரன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்ததாவது:
“108 தொகுதிகளில் தனியாக மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்ற தவெக அவர்களிம் பரம எதிரியாக தேர்தல் களத்தில் சொல்லப்பட்ட திமுகவின் கூட்டணிக் கட்சியை இணைத்துக்கொள்வது சரியா? காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெல்ல திமுகவின் ஓட்டுதானே முக்கிய காரணம் என்ற கேள்வி வருகிறதே! அப்படியானால், திமுக எம்.எல்.ஏ.க்கள் கட்சித்தாவலில் வந்தால் கூட இணைத்துக்கொள்ள முடியுமா?மக்களின் ஓட்டு அந்த திமுக எதிர்ப்பை வைத்ததால்தானே விஜய்க்கு கிடைத்தது என்பதை ஏன் யாரும் யோசிக்கவில்லை.
அது எங்கோ சறுக்கலாக தெரிகிறதே. ஒன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 108 எம்.எல்.ஏ.க்களுடன் ஆட்சி அமைக்க அனுமதி கொடுப்பது. இல்லையேல், மறுதேர்தல் நடத்த முடிவெடுத்தால் அதை எதிர்கொள்வது. இதுதானே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும். கூட்டணிக்கு வர மறுத்த கட்சிகளை இப்போது இணைத்துக்கொள்வது மக்களின் அங்கீகாரத்தை, முடிவை அவமதிப்பது போல் ஆகும் அல்லவா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.