தமிழ்நாட்டுக்கு பழனிசாமி, புதுச்சேரிக்கு ரங்கசாமி : மு.க. ஸ்டாலின் விமர்சனம்
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மு.க. ஸ்டாலின் வாக்குறுதி...
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திராவிட மாடல் திட்டங்கள் புதுச்சேரியிலும் செயல்படுத்தப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 6) உறுதி அளித்துள்ளார்.
புதுச்சேரியில் 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ரங்கசாமி ஏன் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை என்றும், புதுச்சேரி வளர்ச்சி அடையாததற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் காரணம் எனவும் விமர்சித்தார்.
புதுச்சேரியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 7) பிரசாரம் மேற்கொண்டார்.
Advertisement
பிரசாரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
''புதுச்சேரி மாண்புகளை குழித்தோண்டி பாஜக புதைத்துள்ளது. பாஜகவினருக்குத் தேவை என்றால் ஒரு மாநிலத்தையே உடைத்து புதிய மாநிலத்தை உருவாக்குவார்கள்.
அழகான புதுச்சேரியை அலங்கோலமாக்கியது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி. பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி கிடைத்துள்ளார்.
5 ஆண்டுகளாக முதல்வராக இருந்த ரங்கசாமி ஏன் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் கதிதான் ரங்கசாமிக்கும் ஏற்படும். பதவிக்காக ரங்கசாமி மாறி மாறிச் செல்வார்.
ஒரு கட்சியை கூட்டணியில் சேர்த்தால் விலகுவேன் என அறிவித்த ரங்கசாமி, 24 மணிநேரத்தில் தனது முடிவை மாற்றினார்.
தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திராவிட மாடல் திட்டங்களை புதுச்சேரியிலும் செயல்படுத்துவோம். புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். புதுச்சேரி, காரைக்கால் மாநகராட்சிகளாக மாற்றப்படும்.
காரைக்கால் பகுதியை நெற்களஞ்சியமாக மாற்றி தானியக் கிடங்கு அமைக்கப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரியில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும். எனது குரல் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, புதுச்சேரிக்கும் ஒலிகும்'' என மு.க. ஸ்டாலின் பேசினார்.