மார்பகப் புற்றுநோய் உருவாவதற்கு முன்பே அதனைக் கண்டறியும் வகையிலான கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
க்யூரா என்ற நிறுவனத்தின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தக் கருவியின் பெயர் இலுமினா 360 டிகிரி என்பதாகும். இந்த ரோபோட்டிக் கருவியானது மத்திய அரசின் உயிரித்தொழில்நுட்பத் துறையின் உதவியுடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும்.
இது தொடர்பாக க்யூரா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எம்.பாலா, மத்திய உயிரித் தொழில்நுட்ப தொழிற்சாலை ஆராய்ச்சி உதவி கவுன்சிலின் நிர்வாக இயக்குநர் டாகடர் ரேணு ஸ்வரூப் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய தற்போது பயன்படுத்தப்படும் மமோகிராம் கருவியில் பரிசோதனை செய்தால் மார்பகத்தில் வலி ஏற்படுவதாக பெண்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கதிர்வீச்சு, மார்பகங்களை வெளிப்படுத்துதல் போன்ற பிரச்னைகளும் உள்ளன.
மார்பகத்தில் புற்றுநோய் செல்களின் எண்ணிக்கை 400 கோடியை எட்டிய பின்பு அல்லது புற்றுநோய் கட்டியானது 1 செ.மீ. அளவில் இருக்கும்போது மட்டுமே மமோகிராம் கருவியால் அதனைக் கண்டறிய முடியும்.
ஆனால், இந்த நவீன ரோபோட்டிக் கருவியின் மூலம் மார்பகத்தில் உள்ள திசுக்களில் மாறுபாடு ஏற்படும் போதே அதனைக் கண்டறிய முடியும். இதன் மூலம் பரிசோதனை செய்யும் போது சாதாரண திசுக்களுக்கும், மாறுபாடன திசுக்களுக்குமான வித்தியாசங்களை மருத்துவர்களால் உடனே அறிந்து கொள்ள முடியும்.
மேலும் பரிசோதனையின்போது வலி, கதிர்வீச்சு, மார்பகங்களை வெளிப்படுத்துதல் போன்ற எந்தப் பிரச்னையும் ஏற்படாது. இந்தக் கருவியின் மூலம் மார்பகப் புற்றுநோயை எளிதில் கண்டறிந்து அதனைத் தடுக்கவும், முழுவதுமாக குணப்படுத்தவும் முடியும் என்று தெரிவித்தனர்.