கூடங்குளம் போராட்டக் குழுவினருடன் மத்திய நிபுணர் குழு 15-ம் தேதி மீண்டும் பேச்சு: மத்திய அமைச்சர் நாராயணசாமி
புது தில்லி, டிச. 10: கூடங்குளம் போராட்டக் குழுவினருடன் வரும் 15-ம் தேதி மத்திய நிபுணர் குழுவினர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்று பிரதமர் அலுவலக விவகார இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்
புது தில்லி, டிச. 10: கூடங்குளம் போராட்டக் குழுவினருடன் வரும் 15-ம் தேதி மத்திய நிபுணர் குழுவினர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்று பிரதமர் அலுவலக விவகார இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்குள் பணிகள் நடைபெறுவதாக வதந்தியைத் திட்டமிட்டு சிலர் பரப்பி வருகின்றனர் என்று அவர் குற்றம் சாட்டினார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் பாதிப்பு ஏற்படும் என்பதால் அப்பகுதி மக்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டக்காரர்களை இணைத்து தமிழக அரசு அமைத்த குழுவுடன் மத்திய நிபுணர் குழுவினர் கடந்த மாதம் 18-ம் தேதி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இதையடுத்து கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் மாநில குழுவினருடன் மத்திய நிபுணர் குழுவினர் வரும் 15-ம் தேதி மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக "தினமணி' நிருபரிடம் மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
""கடந்த முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அப்பகுதி மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் மத்திய நிபுணர் குழுவினர் கூடங்குளம் பாதுகாப்பு குறித்து எழுத்துப்பூர்வமான அறிக்கை அளித்துள்ளனர். இது பிராந்திய மொழியிலும் அளிக்கப்பட்டுள்ளது. இதை அவர்கள் படித்திருப்பார்கள் என்று நம்புகிறோம். இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் மத்திய குழுவினர் வரும் 15-ம் தேதி மாநில குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்று நம்புகிறோம்'' என நாராயணசாமி கூறினார்.
வதந்தி: ""கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிகள் நடைபெற்று வருவதாகச் சிலர் திட்டமிட்டு வதந்தியைப் பரப்பி வருகிறார்கள். அணுமின் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் ஏதும் நடைபெறவில்லை. பராமரிப்புப் பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணிகள் நடைபெற்று வருவதாக சனிக்கிழமை சிலர் பொய்யானத் தகவல்களைத் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் 10 பேரை சிறைப் பிடித்து வைத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட அதிகாரிகளுடன் தொலைபேசியில் விசாரித்தேன். அவர்கள் அனைவரும் தூத்துக்குடியிலிருந்து வந்த ஒப்பந்தப் பணியாளர்கள் என்று தெரிவித்தனர். அவர்கள் பராமரிப்புப் பணிக்காக வந்தவர்கள்'' என்று நாராயணசாமி கூறினார்.