பிரதமருடனான சந்திப்பு வெறும் கண்துடைப்பா?
புது தில்லி, அக். 7: கூடங்குளம் திட்டப் பணிகள் தாற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் அப்பகுதியில் வெறும் பராமரிப்பு பணிகள் மட்டும் நடைபெறும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தமிழகக் குழுவினரிடம் வாக்குறுதியள
புது தில்லி, அக். 7: கூடங்குளம் திட்டப் பணிகள் தாற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் அப்பகுதியில் வெறும் பராமரிப்பு பணிகள் மட்டும் நடைபெறும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தமிழகக் குழுவினரிடம் வாக்குறுதியளித்தார்.
ஆனால், பணிகள் நிறுத்தப்படும் என்று எழுத்துப் பூர்வமாக அரசு எந்த உறுதியையும் அளிக்கவில்லை.
மாறாக, குறிப்பிட்ட நாளில் கூடங்குளம் அணுமின் திட்டத்தை நிறைவேற்ற ஆதரவு தரவேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிரதமர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை வைத்துப் பார்த்தால், தமிழக குழுவினரின் இந்த சந்திப்பு வெறும் கண்துடைப்பு நாடகம்தானோ என்ற கேள்வி எழுகிறது.
மக்களின் அச்சம் நீங்கும் வரையில், கூடங்குளம் அணுமின் திட்டத்தைத் தாற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், திட்டத்தையே நிறுத்த வேண்டும் என்று மக்கள் இயக்க குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் தனித்தனியாக பேசிய டாக்டர் மைத்ரேயன் (அ.தி.மு.க.), டி. ராஜா (இந்திய கம்யூ.), மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக கூட்டுக்குழு அமைக்க பிரதமர் உறுதியளித்துள்ளார் என்றும் அந்தக் குழுவினர் அறிக்கை சமர்ப்பிக்கும் வரை கூடங்குளம் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படும் என்றும் பிரதமர் வாக்குறுதியளித்தார் என்று கூறினர்.
கூடங்குளம் பகுதியில் பராமரிப்பு பணிகள் மட்டும் நடைபெறும் என பிரதமர் வாக்குறுதி அளித்தார் என்றும் அவர்கள் கூறினர்.
ஆனால், தமிழக குழுவினரைப் பிரதமர் சந்தித்த பிறகு, பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "மக்களின் அச்சத்தைப் போக்க சிறு நிபுணர் குழு அமைக்கப்படும்' என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டப் பணிகள் நிறுத்தப்படுவது குறித்து அதில் குறிப்பிடப்படவில்லை.
இந்த திட்டம் தொடர்பாக வெள்ளிக்கிழமை மாலை பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்திலும் கூடங்குளம் திட்டத்தைக் குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற தமிழக அரசின் ஆதரவை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியது:
பிரதமருடன் நடந்த சந்திப்பின்போது, அணுசக்தி ஆணையத்தின் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கினார்.
"கூடங்குளம் அணுமின் திட்டம் தொடர்பாக 1981 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் கருத்தே திட்ட விரிவாக்கத்துக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நாகர்கோவிலில் 6,000 மக்கள் தொகை மட்டும் உள்ளது' என்று அவர் தெரிவித்தார்.
ஆனால், கடந்த 2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் கருத்து கேட்கும் கூட்டத்தில் 99 சதவீத மக்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதை அணுசக்தி ஆணையத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கவில்லை.
அந்தக் கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் நேரம் வீணாகிவிடும் என்பதால் நாங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த திட்டத்தின் பராமரிப்புப் பணிகளையும் அரசு நிறுத்த வேண்டும் பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன்.
இதற்குப் பதிலளித்த அவர், ""அறைக்குள் வைத்து இது சம்பந்தமாக முடிவு எடுக்க முடியாது; அதிகாரிகளுடன் ஆலோசித்த பின்னர்தான் முடிவு எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.
அரசின் இந்த முடிவு குறித்து தமிழக அரசு பிரதிநிதிகளுடனும், மக்கள் இயக்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.
இந்தச் சந்திப்பு குறித்து மக்களிடம் விளக்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை (அக். 9) இடிந்தகரையில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளோம் என்றார் உதயகுமார்.